அமெரிக்காவின் கடன் தரத்தை குறைத்த ஸ்டேண்டர்டு அண்டு புவர் நிறுவனத் தலைவர் தேவன் சர்மா ராஜினாமா

சர்வதேச கிரிடிட் ரேடிங் நிறுவனமான எஸ் அண்ட் பி நிறுவனத்தின் தலைவராக உள்ள தேவன் சர்மா (55) அமெரிக்க- இந்தியர் ஆவார். கடந்த 2007ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைவராகப் பதவியேற்றார்.
சமீபத்தில் அமெரிக்காவின் உயர்தரக் கடன் குறியீட்டை ஏஏஏ என்பதிலிருந்து ஏஏ என்று குறைத்தது ஸ்டேண்டர்டு அண்டு புவர்.
இது அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமின்றி உலகப் பொருளாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.
ஸ்டேண்டர்டு அண்டு புவர் செய்தது தப்பு என உலகெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன. குறிப்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஸ்டேண்டர்டு அண்டு புவர் நிறுவனம் தவறு செய்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இதனால் அந்த நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தேவன் சர்மா நீக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந் நிலையில் அவர் ராஜினாமா செய்துவிட்டதாக ஸ்டேண்டர்டு அண்டு புவர் அறிவித்துள்ளது. ராஜினாமா செய்தாரா அல்லது ராஜினாமா செய்ய வைக்கப்பட்டாரா என்று தெரியவில்லை,
அவருக்குப் பதிலாக, சிட்டி பேங்க் தலைமை செயல் அலுவலர் டக்ளஸ் பீட்டர்சன் (53) அப் பதவியை ஏற்பார் என்று எஸ் அண்ட பி நிறுவனம் அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் இந்தாண்டு இறுதிவரை, தேவன் சர்மா ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் நிறுவனத்தின் சிறப்பு ஆலோசகராக நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது டம்மி பதவி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications