கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் லோக்பாலில் சேர்க்க அன்னா கோரிக்கை- 3 அம்சங்கள் குறித்து இழுபறி!

அன்னா ஹஸாரேவின் உடல் நிலை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து பிரச்சினையை முடிக்க மத்திய அரசுத் தரப்பும், அன்னா குழுவினரும் தீவிரப் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்தது. அப்போது அரசிடம், புதிய வரைவு மசோதாவை அன்னா தரப்பு வழங்கியது.
தற்போது மொத்தம் 3 அம்சங்கள் குறித்துதான் இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. மற்றவற்றை கிட்டத்தட்ட பேசி முடித்து விட்டனர். இந்த நிலையில் தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய மசோதா நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின்போது நல்லமுன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அன்னா குழு சார்பில் அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசுத் தரப்பில் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் பங்கேற்றார். அவருடன் கிழக்கு டெல்லி எம்.பி. சந்தீப் தீக்ஷித், முதல்வர் ஷீலா தீட்சித்தின் நெருங்கிய உதவியாளரான பவன் கேரா ஆகியோரும் உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் குர்ஷித் கூறுகையில், இது நல்ல சந்திப்பாக அமைந்தது. இருப்பினும் எதுவும் இறுதிப்படுத்தப்படவில்லை. உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து பேசி வருகிறோம். மேலும் விவாதங்கள் நடைபெறும் என்றார்.
விரைவில் பிரணாப் தலைமையிலான அதிகாரப்பூர்வ அரசுக் குழுவினருடன் அன்னா குழுவினர் சந்திக்கவுள்ளனர்.
கிரண் பேடி கூறுகையில், கீழ்மட்ட அதிகாரிகளையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், லோக்பால் மூலமாக மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைப்பது உள்ளிட்ட 3 அம்சங்கள் குறித்து தற்போது சிக்கல் நீடிக்கிறது. இதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து பேசுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications