அன்னா விவகாரம்: லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி, ஒத்திவைப்பு
டெல்லி: அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதம் அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்று மத்திய அரசு கூறியதற்குக் கண்டனம் தெரிவித்து லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இன்று பாஜக உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பெரும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
லோக்சபா இன்றுகாலை கூடியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாக அறிவித்தார் சபாநாயகர் மீராகுமார். அப்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதம் அவருடைய தனிப்பட்ட போராட்டம், அதற்கு அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். மத்திய அரசு எப்படி இப்படிக் கூறலாம் என்று கேட்டார்.
இதையடுத்து பிரணாப் முகர்ஜி எழுந்து இதுகுறித்து விளக்கமளித்தார். தான் அப்படிக் கூறவே இல்லை என்று அவர் மறுத்தார். ஆனால் பாஜக உறுப்பினர்களும், இடதுசாரி உறுப்பினர்களும் எழுந்து அமளியில் குதித்தனர்.
சபாநாயகர் இருக்கை முன்பு கூடி பிரணாபின் கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் அமளி அதிகரித்தது. இதையடுத்து 11.30 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதே நிலைதான் ராஜ்யசபாவிலும், அங்கும் அமளி ஏற்படவே அவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைத்து ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications