ஏ.டி.எம். சென்டர்களில் புதுவித திருட்டில் சிக்கி தவிக்கும் சவுதி அரேபியா
ரியாத்: ஏ.டி.எம்., சென்டர்களில் பதிந்த தொகையை விட குறைவான பணம் வந்தாலும், முழுப் பணமும் எடுத்துக் கொண்டதாக வங்கி கணக்கில் காட்டுவதால் செய்வது அறியாமல், சவுதி அரேபியா மக்கள் தவித்து வருகின்றனர்.
நுகர்வோருக்கு 24 மணிநேரமும் பணம் எடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது ஏ.டி.எம்., முறை. ஏ.டி.எம்.,சென்டர்களில் நுகர்வோரின் கார்டு மூலம் தேவைப்படும் தொகையை உடனுக்கு உடன் எடுத்து கொள்ளலாம். அதனால் பணம் எடுக்கும் நேரமும் குறைந்தது.
இந்த முறை கொண்டு வரப்பட்ட போது, பணம் எடுக்கும் போது, பல குளறுபடிகள் ஏற்பட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட வங்கிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து, குழப்பங்கள் களையப்பட்டன. இந்நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் வசிக்கும் மக்களுக்கு தற்போது புதுவித குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள சில வங்கிகளின் ஏ.டி.எம்., சென்டர்களில் பணம் எடுக்க பதியும் தொகையை விட, குறைந்த பணமே கிடைப்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, ஏ.டி.எம்., சென்டரில் பணம் இழந்த ஒருவர் கூறுகையில், ஏ.டி.எம்., சென்டர்களில் பணம் எடுக்க பதிவு செய்யும் மதிப்பை விட குறைவான பணமே வருகிறது. ஆனால், வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட தொகையே கழித்து கொள்ளப்படுகிறது.
எடுத்துகாட்டாக, 3 ஆயிரம் ரூபாய் எடுக்க பதிவு செய்தால், ஆயிரம் ரூபாய் மட்டுமே வருகிறது. ஆனால், 3 ஆயிரம் எடுத்து கொண்டதாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுகுறித்து, வங்கி நிர்வாகத்திற்கு புகார் அனுப்பினேன். ஆனால், 10 நாட்களுக்கு பின், வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரம் சரியாக இயங்குவதாகவும், எனது கணக்கு சரியாக வரவு வைத்திருப்பதால், புகார் நிராகரிக்கப்படுவதாக பதில் வந்தது, என்றார்.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத சில வங்கி அதிகாரிகள் கூறுகையில், ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணி, சில ஒப்பந்த நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. பணம் நிரப்பும் பணியில் ஈடுபடும் சில பணியாளர்கள், 500 ரூபாய் நோட்டுகள் வைக்கும் இடத்தில், அதற்கு பதிலாக 100 நோட்டுகளை வைத்து விடுகின்றனர்.
இதை இயந்திரத்தால் கண்டுபிடிக்க முடியாததால், அவை 500 ரூபாய் வரிசையில் வைக்கப்பட்டுள்ள 100 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் என்ற கணக்கில் நுகர்வோருக்கு வழங்கிவிட்டு, வங்கி கணக்கிலும் 500 ரூபாயை வரவு வைக்க உத்தரவு கொடுத்துவிடுகிறது.
இதனால், நுகர்வோருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும், அதை நிரூபிக்க முடியாமல் உள்ளது. பணம் எடுத்தவுடன் வரும் கணக்கு துண்டு சீட்டிலும் அப்படியே பதிவாகிறது. இதனால், நுகர்வோர் ஏமாற்றப்படுவது தெரியாமல் வங்கி ஊழியர்களும், தங்களை வங்கி ஊழியர்கள் ஏமாற்றிவிட்டதாக நுகர்வோரும் மாறி மாறி குற்றப்படுத்தும் சம்பவங்கள் நடக்கிறது, என்றார்.
ஏ.டி.எம்., சென்டர்களி்ல் இருந்து வெளியே வரும் நடந்த திருட்டு சம்பவங்களை அடுத்து, தற்போது இந்த கண்டுபிடிக்க முடியாத புதுவகை திருட்டில் சிக்கியுள்ள சவுதி அரேபியா மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications