கடந்த 100 நாட்களில் கட்டப் பஞ்சாயத்து எங்கே போயிற்று என்பதே தெரியவில்லை- பண்ருட்டி ராமச்சந்திரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 100 நாள்களில் முதல்வர் ஜெயலலிதாவின் கண்டிப்பான நடவடிக்கைகளால் கட்டப் பஞ்சாயத்து எங்கே போயிற்று என்றே தெரியவில்லை என்று சட்டசபை தேமுதிக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

சட்டசபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவின் வசம் உள்ள உள்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,

கடந்த 100 நாள்களில் முதல்வர் ஜெயலலிதாவின் கண்டிப்பான நடவடிக்கைகளால் கட்டப் பஞ்சாயத்து எங்கே போயிற்று என்றே தெரியவில்லை.

காவல்துறையினர் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்களே தவிர, ஆட்சியாளர்களுக்கு அல்ல. காவல்துறை நன்றாகச் செயல்பட்டாலே அந்த அரசு நல்லாட்சி என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும். சட்டப்படி செயல்படுவதுதான் இந்த அரசுக்கு காவல்துறையினர் ஏற்படுத்தித் தரக்கூடிய நல்ல பெயர் ஆகும்.

நிலப்பறிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிறையில் உள்ளவர்களை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பாளையங்கோட்டை சிறைக்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். மத்திய அமைச்சர் ஒருவரே சிறையில் உள்ளவர்களைச் சென்று சந்தித்தால் சாட்சிகள் அச்சப்படுவார்கள். சாட்சி சொல்ல முன்வரமாட்டார்கள்.இது வழக்கு விசாரணையில் தலையிடுவது போல் ஆகும்.

இந்தக் காரணத்துக்காக காவல்துறை அவர் மீது குற்ற வழக்கைப் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து அழகிரியிடம் கேட்டபோது, தன் நண்பர்களை சந்திக்கச் சென்றதாகக் கூறியிருக்கிறார். அதைப் பார்க்கும்போது அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பனையூர் இரட்டைக் கொலையில் தொடர்புடையதாக சண்முகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கொலைக்கான காரணத்தைப் போலீஸாரிடம் கூறியதாகவும், அப்போதைய ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒருவரின் பெயரைக் கூறியதால், அவர் கொலை செய்யப்பட்டதாகவும் பேசப்பட்டது.

சண்முகராஜனின் உடலைப் போலீஸாரே அவசரமாக எரிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். இதோடு, இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பான தடயங்களும் மறைக்கப்பட்டுள்ளன. பனையூர் இரட்டைக் கொலை வழக்கை தமிழக அரசு மீண்டும் விசாரிக்க வேண்டும்.

தினகரன் பத்திரிகை எரிப்பு சம்பவத்தில் மூன்று அப்பாவி ஊழியர்கள் உயிரிழந்தனர். இதற்குக் காரணமானவர்களுக்கு நீதிமன்றத்தில் தக்க தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.இந்தச் சம்பவம் போலீஸார் முன்னிலையிலேயே நடைபெற்றது.

ஒரு அரசு 100 நாட்கள் முடித்திருப்பது என்பது மிகப்பெரிய காலம் அல்ல. சாதனையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் முக்கியமான நாளாகும். சாதனை செய்யாத நாளே வேதனையான நாள். உள்ளம் மகிழும் வகையில் கடந்த 100 நாட்களில் ஆட்சி நடைபெற்றுள்ளது. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார் முதல்வர்.

"கூடா நட்பு கேடாய் முடியும்' என்று கூறிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கட்சி சட்டப் பேரவையில் ஒரு கட்சியாகக் கூட அல்லாமல், ஒரு குழுவாக மாறி விட்டது. 100 நாள்களுக்காக முதல்வரை பாராட்டுவது என்பது அவருக்கு பெருமை சேர்க்க அல்ல. ஊக்கப்படுத்தவே.

இந்தப் பாராட்டுகளால் அவருக்கு சுமை ஏற்படலாம். இந்த ஆட்சி அமைந்த பின் மக்களுக்கு அரிசி கிடைக்கிறது, சேலை கிடைக்கிறது, வீடு கிடைக்கிறது. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே காமராஜர் ஆட்சிக் காலம் முதல் இப்போது வரை சொல்லப்பட்டு வருகிறது. அது, இந்த ஆட்சியில் செய்யப்படுகிறது.

தமிழகத்தை நிர்வகிப்பது மிகவும் சிக்கலானது. இதற்குக் காரணம், அண்டை மாநிலங்களில் இல்லாத பிரச்சனை நமக்கு இருக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற பிரச்சனைகளும், கடலோர மீனவர்கள் பிரச்சனையும், இலங்கைத் தமிழர் பிரச்சனையும் மற்ற மாநிலங்களில் இல்லை. இந்தப் பிரச்சனைகளை உணர்ந்து அதைத் தீர்க்கவல்ல உத்தமத் தலைவர் நமக்குத் தேவை. இந்த தருணத்தில் நமக்கு உதவியாக இருக்க வேண்டிய மத்திய அரசு உபத்திரமாக இருக்கிறது என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+