தயவு செய்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுங்கள்: அன்னாவுக்கு பிரதமர், சோனியா கோரிக்கை

ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித மாற்றுமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி அன்னா ஹஸாரே டெல்லி ராம்லீலா மைதானத்தில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது,
நான் அன்னா ஹஸாரேவை பாராட்டுகிறேன், வணங்குகிறேன். உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அவரை மீண்டும் கேட்டுக்கொள்ளப் போகிறேன். அன்னாவின் கருத்துகள் அனைத்தும் குறித்து வைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று அவரிடம் தெரிவிக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற நிலைக்குழு ஜன் லோக்பால் மசோதாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஊழல் ஒரு தேசியப் பிரச்சனை. அதை ஒழிக்க ஆளும் மத்திய அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு என்ன நடவடிக்கை எல்லாம் எடுக்க முடியுமோ, அத்தனையும் எடுக்கும். எனது சொத்துக்களை கணக்கிடுவதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றும் இல்லை. என் மீது குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள் அந்த புகார்களை நிரூபித்துக் காட்டட்டும். ஒருவர் மீது ஒருவர் குறை கூற இது சரியான நேரம் அன்று என்றார்.
இதற்கிடையே அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சோனியா காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு அன்னா ஹஸாரேவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பூதாகரமாக வெடித்துள்ள அன்னா ஹஸாரே விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கவலை அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications