அண்ணா அறிவாலயத்தில் உள்ள மாநகராட்சி பூங்கா மீட்கப்படும்- அமைச்சர்
சென்னை: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ தங்கவேல், கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது அதிமுக எம்எல்ஏ வெற்றிவேல் குறுக்கிட்டு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவைக் கைப்பற்ற வேண்டும். அந்தப் பூங்கா வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்தப்படுகிறது.
அதற்கடுத்துள்ள நட்சத்திர ஹோட்டலில் மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவைச் சுற்றி சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதேபோல், இங்கும் எழுப்ப வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, திமுகவினர் அறிவாலயத்தில் மட்டும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. முன்னாள் அமைச்சர் பொன்முடி கூட மாநகராட்சிக்குச் சொந்தமான நிலத்தை மாமியார் பெயரில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். நில அபகரிப்பு தொடர்பாக சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி, நாம் தகவல் தொழில்நுட்பப் பூங்கா குறித்து பேசத் தொடங்கினோம். ஆனால், விவாதம் வேறொரு பூங்காவைப் பற்றி போய்விட்டது என்றார்.
யார் அந்த அ னா, ஆவன்னா:
சட்டசபையில் வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பொன்னுபாண்டியன், தமிழகம் முழுவதும் நிலப்பறிப்பு புகார்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மதுரை, திருநெல்வேலி பகுதியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அ-னா, ஆ-வன்னா, க-னா, இ-ன்னா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றார்.
அப்போது வீட்டு வசதி அமைச்சர் வைத்திலிங்கம் குறுக்கிட்டு, அந்த நால்வரும் யாரென்று உறுப்பினர் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசுப் பரிசீலிக்கும்.
பொன்னுபாண்டி: அ-னா என்றால் அழகிரி, ஆ-வன்னா என்றால் ஆவுடையப்பன், க-னா என்றால் கருப்பசாமி பாண்டியன், இ-னா என்றால் இ.பெரியசாமி என்றார் (நால்வருமே திமுகவினர்)
அமைச்சர் வைத்திலிங்கம்: நிலப் பறிப்புப் புகார் தொடர்பாக ஏற்கெனவே மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் மீதும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
காலில் விழ வந்த எம்எல்ஏவை தடுத்த ஓ.பி.:
சட்டசபையில் கேள்வி நேரத்தில் அவினாசி எம்எல்ஏ கருப்பசாமி, திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் ஊராட்சியில் ஜவுளி சந்தை அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ரமணா, தொழில் முனைவோர் யாராவது முன்வந்தால், அரசு உதவியுடன் ஜவுளி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அதைத் தொடர்ந்து நன்றி சொல்லிப் பேசிய கருப்பசாமி, திடீரென்று அமைச்சர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்து அங்கிருந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் விழ முயன்றார். அவரை படுவேகத்தில் தடுத்த ஓ.பி. இருக்கைக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.
அருண்பாண்டியன் மட்டும் ஆஜர்-தேமுதிக இருக்கைகள் காலி:
நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 55வது பிறந்தநாள் என்பதால் அக் கட்சியின் எல்லா எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வரவில்லை.
காலையில் கேள்வி நேரத்தின்போது சட்டசபையில் பேராவூரணி தேமுதிக எம்.எல்.ஏவான நடிகர் அருண்பாண்டியன் மட்டும் வந்திருந்தார். தே.மு.தி.கவினரின் மற்ற இருக்கைகள் அனைத்தும் காலியாக இருந்தன.












Click it and Unblock the Notifications