வேலூர் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னையில் 7 பேருக்கு பயிற்சி

வேலூர் மத்திய சிறை 171 ஆண்டுகள் பழமையானது. இங்கு இரு தூக்கு மேடைகள் உள்ளன. ஆனால், சிறையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தனியாக பணியாளர்கள் யாரும் இல்லை. 28 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுமியை கொன்ற குற்றத்துக்காக சென்னையைச் சேர்ந்த சந்துரு என்பவர் தூக்கிலிடப்பட்டார்.
அதன்பிறகு கடந்த 28 ஆண்டுகளாக வேலூர் சிறையில் யாரும் தூக்கில் போடப்படவில்லை. இதனால் இரு மேடைகளும் துருப் பிடித்து சிதிலமடைந்து காணப்படுகின்றன. இப்போது அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக 7 பேருக்கு பயிற்சி கொடுக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை புழல் சிறையில் அந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் கருணை மனு-ஆர்டிஐ மூலம் தகவல் பெற திட்டம்:
இந் நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரைக் காக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.
இவர்கள் ஜனாதிபதியிடம் அளித்த கருணை மனு மீது கடந்த 11 ஆண்டுகளாக நடந்த விவாதங்கள் என்ன என்பதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற தமிழக வழக்கறிஞர்கள் சிலர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்,
இந்த கருணை மனுக்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகம் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது, இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகையுடன் எந்த விதமான கடிதப் போக்குவரத்து நடைபெற்றது என்பது பற்றிய விவரங்களை இந்த வழக்கறிஞர்கள் கேட்கவுள்ளனர்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் மீதான குற்றசாட்டுகள் என்ன?:
முருகன் அவரது மனைவி நளினியை விடுதலைப் புலி சுபாவுக்கு துணையாக ஸ்ரீபெரும்புதூருக்கு அனுப்பி வைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
சிவராசன் தங்குவதற்கு அறை எடுத்து கொடுத்தாக சாந்தன் மீதும், பேரறிவாளன் மீது ராஜிவைக் கொன்ற வெடிகுண்டுக்கு பயன்படுத்திய பேட்டரி வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications