கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை: நல்லகண்ணு குற்றச்சாட்டு
திருச்சி: கொள்ளிடம் பகுதியில் இயந்திரம் மூலம் மணல் எடுத்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் மணல் குவாரியில் நடைபெறும் மணல் கொள்ளையை அரசு தடுத்து நிறுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்பில் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம் துவங்கப்பட்டுள்ளது.
இந்த நடைபயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு துவக்கி வைத்து பேசியதாவது, அன்பில் மணல் குவாரி பகுதியில் 200க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறு மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்களில் விவசாயம் நடந்து வருகிறது.
மேலும் இப்பகுதியிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம், பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர், மற்றும் தொழிற்சாலைகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகள் வரை மணல் அள்ளும் நிலை உள்ளது.
அதே பகுதியில் 3 அடிஆழம் மணல் அள்ளுவதற்கு பதிலாக நீதிமன்ற தீர்ப்பை மீறி 10 அடி ஆழத்திற்கு மேல் அள்ளுகின்றனர். மேலும் ஆற்றில் அள்ளும் மணலை கொள்ளிட கரை அருகே உள்ள விவசாய நிலங்களில் குவித்து வைத்து, மறுவிற்பனை செய்கின்றனர்.
தென் மாநிலங்களில் இயந்திரம் மூலம் மணல் எடுக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் இயந்திரம் மூலம் தொடர்ந்து மணல் எடுத்து வருகின்றனர். இதனால் கொள்ளிட ஆற்றில் பள்ளம் உருவாகி உயிர்சேதம் ஏற்படுகிறது.
எனவே, அன்பில் பகுதியில் மக்கள் மணல் கொள்ளையை தடுத்த நிறுத்தவும், நீதிமன்றம் வழங்கிய விதிகளுக்கு உட்பட்டு மணலை அள்ளவும், விற்பனையை முறைப்படுத்தவும் அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு நல்லகண்ணு பேசினார்.
சில நாட்களுக்கு முன்பு, சட்டசபையில் விவாதத்தின் போது, பேசிய பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தற்போது தமிழக ஆற்றில் மணல் கொள்ளை இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications