நிலமோசடி வழக்கில் லால்குடி திமுக எம்.எல்.ஏ கைது
திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியன் நில மோசடி தொடர்பாக நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
துறையூரைச் சேர்ந்த மருத்துவர் சீனிவாசன் என்பவர் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது நில அபகரிப்பு புகார் கொடுத்தார். திருச்சியில் கலைஞர் அறிவாலயம் கட்டுவதற்காக சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகே இருந்த தனது 13,000 சதுர அடி நிலத்தை நேரு மிரட்டி, அடித்து உதைத்து தன்னிடம் இருந்து பறித்துக் கொண்டதாக சீனிவாசன் புகார் கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில் கே.என். நேரு, சௌந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., ஜவுளிக்கடை உரிமையாளர் சுந்தரராஜுலு உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் அதிகாலை திருச்சி தில்லை நகரில் உள்ள நேருவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.
நேருவுடன் திமுக முன்னாள் எம்எல்ஏ 'அன்பில்' பெரியசாமியும் கைது செய்யப்பட்டார். லட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் சுந்தரராஜூலு, மாமுண்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இதே வழக்கில் நேருவின் உறவினர் ராமஜெயம், துணை மேயர் அன்பழகன் ஆகியோர் மீதும், லால்குடி தொகுதியின் திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், துணை மேயர் அன்பழகன் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் மீது இது தவிர மேலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நேருவின் உறவினர் ராமஜெயம் வெளிநாடு சென்றிருக்கிறார்.
இந் நிலையில் எம்எல்ஏ செளந்தரபாண்டியனை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
கருணாநிதியின் உறவினர் மீது ரூ.1 கோடி நிலமோசடி புகார்:
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வியின், மருமகன் ரூ.1 கோடி நிலமோசடி செய்துவிட்டதாக ஆந்திர ரியல் எஸ்டேட் அதிபர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
செல்வியின் மருமகன் டாக்டர் ஜோதிமணி மீது, ஆந்திர ரியல் எஸ்டேட் அதிபர் சோமசேகர் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில்,
சென்னை தியாகராயநகர் ஜி.என். செட்டி ரோட்டில் எனது மனைவி கீதா பெயரில் ஒன்றரை கிரவுண்ட் நிலம் வாங்கினேன். இந் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உமா மகேஸ்வரி என்பவர் செல்போனில் பேசினார். தன்னை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதி மணியின் சகோதரி என்று அறிமுகம் செய்து கொண்டார்.
பின்னர், நான் வாங்கிய இடத்தின் அருகே இருந்த நாலரை கிரவுண்ட் நிலத்தை மருத்துவமனை கட்ட ஜோதிமணியும், உமா மகேஸ்வரியும் வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக என்னிடம் உள்ள நிலமும் தேவைப்படுவதாக கூறினார்.
ஆனால், ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.40 லட்சத்திற்கு என்னிடம் கேட்டு மிரட்டினார்கள். அதன் பின்னர், அவர்களிடம் உள்ள நிலத்தை ரூ.15 கோடிக்கு வாங்கிக் கொள்ளுமாறு என்னிடம் கூறினர். நான் என்னுடைய சொத்தை காப்பாற்றுவதற்காக, எனது உறவினர்களுக்காக அந்த சொத்தை விலைக்கு வாங்க சம்மதித்தேன்.
அதற்காக, அவர்களிடம் ரூ.1 கோடி முன்பணம் கொடுத்தேன். ஒரு வார காலத்திற்குள் நிலத்தை பத்திரம் செய்து தருவதாக கூறினார்கள். ஆனால், 3 மாதங்கள் ஆகியும் சொன்னபடி பத்திரம் முடித்து தரவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்து கேட்டபோது, குடும்பத்தோடு உயிரோடு இருக்க முடியாது என்று மிரட்டினார்கள். அந்த சொத்தும் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, அவர்களிடம் நான் கொடுத்த ரூ.1 கோடி பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications