சென்னையைத் தொடர்ந்து சேலத்திலும் நான்கு பெண் வக்கீல்கள் உண்ணாவிரதத்தில் குதித்தனர்
சேலம்: சென்னையைத் தொடர்ந்து சேலத்திலும் பெண் வக்கீல்கள் நான்கு பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பரபரப்பு மேலும் கூடியுள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் கயல் என்கிற அங்கயற்கண்ணி, சுஜாதா மற்றும் வடிவாம்பாள் ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பேட்டில் உள்ள தனியார் இடத்தில் இவர்கள் மூன்று பேரும் கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுடன் மேலும் சிலரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் நான்கு பெண் வக்கீல்கள் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர். வக்கீல்கள் தமயந்தி, கீதா, அறிவுமதி, பிரபா ஆகியோர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இதனால் சேலத்தில் பரபரப்பு நிலவுகிறது.
இதற்கிடையே, சேலம் சட்டக் கல்லூரி மாணவர்கள், மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களில் சிலர் உள்ளே நுழைய முயன்றனர்.இதையடுத்து போலீஸார் கேட்டை மூ்டினர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதட்ட நிலை உருவானது.
9ம் தேதி முதல் தஞ்சை வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
இந்த நிலையில் செப்டம்பர் 9ம் தேதி முதல் காலவரையற்ற கோர்ட் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தஞ்சை மாவட்ட வக்கீல்கள் சங்கம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications