தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படலாம், அப்பாவிகள் பாதிக்கப்பட கூடாது: பொன்.ராதா கிருஷ்ணன்
மன்னார்குடி: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அப்பாவிகள் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதே பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்துகள் இல்லை. ஆனால், அதேநேரம் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதே பா.ஜ.க.,வின் நிலைப்பாடு.
நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அப்சல் குருவின் மரண தண்டனையை ஆதரித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதை பா.ஜ.க. வரவேற்கும். நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் நிறைவேற்றாமல் உள்ள அப்சல்குருவின் மரண தண்டனையை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அயல்நாட்டில் பதுக்கிவைத்திருக்கும் கருப்புப்பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.க., பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாகவே அன்னாஹசாரேவின் போராட்டம் அமைந்துள்ளது.
பிரதமர் நீதித்துறை உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்கும் வகையில் வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும். சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததை பா.ஜ.க. வரவேற்கின்றது, என்றார்.












Click it and Unblock the Notifications