ஈழப் பிரச்சனையில் ஜெயலலிதாவின் நாடகம் வெளிப்பட்டு விட்டது- மு.க.ஸ்டாலின்
கடலூர்: ஈழத் தமிழர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவின் கபட நாடகம் வெளிப்பட்டு விட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தீர்மானம் போடத் தெரிந்த அவரால், 3 தமிழர்களின் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கூறி தீர்மானம் போட முடியாதா என்று கேட்டுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
கடலூரில் செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது அவரிடம் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் விவகாரத்தில் தலையிட தனக்கு அதிகாரம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது குறித்துக் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதா, இலங்கைப் பிரச்சனை தொடர்பாக நடத்தி வரும் கபட நாடகம் இன்று வெளிப்பட்டு விட்டது. 3 பேரையும் தூக்கில் போடக் கூடாது என்று கூறி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தாலே கூட போதும். தீர்மானம் கூட தேவையில்லை. பரிந்துரை செய்தாலே போதும். அதைக் கூட இவரால் செய்ய முடியாதா?.
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக தீர்மானம் போட்டவருக்கு 3 பேரை தூக்கில் போடக் கூடாது என்று போட முடியாதா என்று கேட்டார் ஸ்டாலின்.
திமுகவின் வெற்றிகளுக்கும் தோல்விக்கும் பெண்கள்தான் காரணம்:
முன்னதாக ரமலான் பெருநாளையொட்டி இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை புது வண்ணாரப்பேட்டையில் நடந்தது. விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உதவிகளை வழங்கிப் பேசுகையில்,
தேர்தல் வந்தால்தான் சில அரசியல் கட்சிகளுக்கு இஸ்லாமிய சமுதாய மக்களின் ஞாபகம் வரும். ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிறுபான்மையின மக்களின் நலனுக்காகப் பாடுபடக் கூடியது திமுக.
தன் எண்ணங்களைச் செயல்படுத்த நபிகள் நாயகம் முனைந்தபோது எத்தனையோ சோதனைகளை சந்தித்தார்.
அதைப்போல திமுகவும் பல்வேறு சோதனைகள் சந்தித்துத்தான் வளர்ந்தது. அதனால் சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் திமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். திமுகவின் பல வெற்றிகளுக்கும் பெண்கள்தான் காரணம். தோல்விக்கும் பெண்கள்தான் காரணம் என்றார்.












Click it and Unblock the Notifications