தூக்கு தண்டனை: ஜெயலலிதா பேச்சுக்கு சுப்பிரமணிய சாமி ஆதரவு
மதுரை: ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை தடுத்து நிறுத்த அரசியலமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது சரி தான் என ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜிவ்காந்தி கொலையாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையில் யாரும் குறுக்கிடக் கூடாது என்றும் அவர் பேசியுள்ளார்.
இதுகுறித்து சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை நிறுத்தக் கூடாது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதை இப்போது தடுத்து நிறுத்துவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் அதிகாரம் இல்லை. எனவே நான் குறுக்கிட முடியாது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது சரி தான்.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 15 க்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனுத் தாக்கல் செய்வேன் என்று நான் கூறியதால் தான் 12 வருடமாக செயலற்று இருந்த மத்திய அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்துள்ளது.
தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன் , பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடும் முடிவில் இதற்கு மேலும் குறுக்கீடு இருக்க கூடாது.
மேலும் மற்றொரு குற்றவாளியான நளினிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பின்பு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதை நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications