எனது சொத்து மதிப்பு ரூ.51 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குடியரசுக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான செ.கு. தமிழரசன் பேசுகையில்,
ஆட்சியில் இருப்பவர்கள் சொத்து கணக்கை வெளியிட்டு வருகிறார்கள். இன்று காலை ஒரு ஆங்கில நாளிதழில் புரட்சித் தலைவி முதல்வர் ஜெயலலிதா தனது சொத்து கணக்கை வெளியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது. புரட்சித் தலைவி எதையும் வெளிப்படையாக செய்பவர். மனசாட்சி தவிர எதற்கும் அஞ்சமாட்டார். எனவே சொத்து கணக்கை முதல்வர் தெரிவிப்பாரா? என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, உறுப்பினர் குறிப்பிட்ட ஆங்கில பத்திரிகை டெக்கான் கிரானிக்கல். பெரிய ரகசியத்தை கண்டு பிடித்தது போல அவர்கள் இந்தச் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் எந்த ரகசியமும் இல்லை.
இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைப்படி சட்டமன்ற அல்லது நாடாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது சொத்து கணக்கை வெளியிட வேண்டும். அதன்படி நான் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட போது, 5 மாதங்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் மாதம் எனது சொத்து கணக்கை வெளியிட்டேன். அப்போது அனைத்து பத்திரிகைகளிலும் அந்த விவரம் பெரிதாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் நான் போட்டியிட்டபோது கொடுத்த விவரத்தின்படி எனது அசையும் சொத்து 13 கோடியே 3 லட்சத்து 77 ஆயிரத்து 929 ரூபாய்.
அசையா சொத்து ரூ.38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம். எனது மொத்த சொத்தின் மதிப்பு ரூ.51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 929.
தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆகியிருக்கிறது. அதன் பிறகு நான் இதுவரை எந்த சொத்தும் வாங்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நான் மீண்டும் சொத்து பட்டியல் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications