ஜனார்தன் ரெட்டி வீட்டில் ரூ. 3 கோடி, 30 கிலோ தங்கம், ஹெலிகாப்டர் பறிமுதல்
பெல்லாரி: சுரங்க ஊழலிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி வீட்டில் இருந்து ரூ. 3 கோடி ரொக்கம், 30 கிலோ தங்கம், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜனார்தன் ரெட்டி தனது சகோதரர்களுடன் சேர்ந்து ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தை கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் பெல்லாரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கப் பணிகள் செய்து வருவதாக கடந்த ஜூலை 27-ம் தேதி சமர்பிக்கப்பட்ட லோக்ஆயுக்தா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் ஜனார்த்தன் ரெட்டியின் பெயரும் உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிகாலையிலேயே பெல்லாரியில் உள்ள ஜனார்தன் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ரூ. 3 கோடி ரொக்கம், 1500 ஆவணங்கள் மற்றும் இரும்பு தாது மாதிரிகள் கைபற்றப்பட்டன. இதையடுத்து ஜனார்தன் ரெட்டி மற்றும் அவரது மைத்துனன் பிவி ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்த்தைச் சேர்ந்த கான்ஸ்டபிளின் மகன்கள் ஜனார்தன் ரெட்டி, கருணாகர ரெட்டி மற்றும் சோமசேகர ரெட்டி. அவர்கள் இரும்பு தாது அதிகமுள்ள கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரியில் குடிபெயர்ந்தனர். 10 ஆண்டுகளுக்குள் சிறு வியாபாரிகளாக இருந்தவர்கள் பெரிய கோடீஸ்வரர்களாகிவிட்டனர்.
ஜனார்தன் ரெட்டியின் பெங்களூர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து லேப்டாப், டைரி, செல்போன், 4 ரெஜிஸ்டர்கள் கைபற்றப்பட்டன. அவரது ஹெலிகாப்டரான ருக்மினியும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜனார்தன் ரெட்டி தவிர்த்து அவரது மைத்துனன் பிவி ஸ்ரீனிவாஸ் ரெட்டியின் பெல்லாரி மற்றும் அனந்தபூர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரூ. 1.5 கோடி ரொக்கம் மற்றும் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த 2009-ம் ஆண்டு கர்நாடக-ஆந்திரா எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில் ஒபலாபுரம் சுரங்க நிறுவனம் சட்டவிரோதமாக சுரங்கப் பணிகள் மேற்கொண்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து தான் ஜனார்தன் மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரெட்டி சகோதரர்களை அமைச்சரவையில் சேர்க்காததற்கும், தனக்கு அமைச்சர் பதவி அளிக்காததற்கும் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக எம். எல். ஏ. ஸ்ரீராமுலு தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த அடுத்த நாளே ரெட்டி வீட்டில் சோதனை நடந்துள்ளது.
பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாமி கும்பிட சென்ற ஸ்ரீராமுலு வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி ஜெகன்மோகன் ரெட்டி தவித்து வருகையில் ஜனார்தன் ரெட்டி கைதாகியுள்ளார். ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டிக்கும், அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் நெருக்கமானவர் ஜனார்தன் ரெட்டி.
ஜனார்தன் ரெட்டிக்கும் நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் வெங்கய்யா நாயுடு ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும், இது பற்றிய விசாரணையை எதிர்கொள்ள அவர்கள் தயாரா என்றும் காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த சுஷ்மா ஸ்வராஜ் எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications