ஜெயலலிதா வீட்டு முன் பிளேடால் கையை அறுத்து அதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்கு வந்த அதிமுக தொண்டர் ஒருவர் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. நெய்வேலியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் வெற்றிவேல். இவர் அதிமுக தொண்டர். இன்று காலை போயஸ் தோட்டத்துக்கு அவர் வந்தார். முதல்வரை சந்திக்க வேண்டும் என்று பாதுகாவலர்களிடம் கூறினார்.
அப்படியெல்லாம் பார்க்க முடியாது. கோட்டைக்குப் போய் முதல்வர் குறை தீர்ப்புப் பிரிவில் புகார் கொடுக்குமாறு போலீஸார் அறிவுறுத்தி அனுப்ப முயன்றனர். ஆனால் அவர் போகாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா அலுவலகம் செல்வதற்காக காரில் வீட்டை விட்டு வெளியேறினார். இதைப் பார்த்த வெற்றிவேல் சடாரென தனது கையில் வைத்திருந்த பிளேடை எடுத்து இடது கை மணிக்கட்டில் அறுத்துக் கொண்டார். இதனால் ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த போலீஸார் விரைந்து வந்து அவரது கையைப் பிடித்து ரத்தம் கொட்டாமல் தடுக்க முயன்றனர். பின்னர் முதலுதவி சிகிச்சை அளித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தால் அங்குசிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, தேர்தலில் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒரு பெண் தனது நாக்கை வெட்டி கோவிலுக்கு காணிக்கை செலுத்தினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications