ஜிம்பாப்வே அதிபர் முகாபேக்கு புற்றுநோய்: 2 ஆண்டுகள் வரையே வாழ்வார்
ஹராரே: ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேக்கு புராஸ்டேட் புற்று நோய் உள்ளது என்றும், அவர் 2013-ம் ஆண்டைத் தாண்டுவது கஷ்டம் என்றும் அமெரிக்க அதிகாரி அனுப்பிய ரகசிய கேபிள் செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
அன்மையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில், ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேக்கு (87) புராஸ்டேட் புற்று நோய் உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முகாபேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 ஆண்டுகள் தான் வாழக்கூடும் என்று எச்சரித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து டெய்லி மெயில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த சந்திப்பின் போது முகாபேக்கு புற்று நோய் இருப்பதாக ஜிம்பாப்வே நாட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் கிடியன் கோனோ ஹராரேவுக்கான அமெரிக்க தூதர் ஜேம்ஸ் மெக்ஜீயிடம் தெரிவித்துள்ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கு பிறகு ஜேம்ஸ் வாஷிங்டன்னுக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டுள்ளதாவது,
தனது செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் முகாபேக்கு அறிவுறுத்தியுள்ளனர் என்று கோனோ தெரிவித்தார். தேர்தலுக்குப் பிறகு பதவியில் இருந்து விலகிவிடுவதாக முகாபே மருத்துவர்களிடம் தெரிவித்ததாக கோனோ கூறினார்.
இவ்வாறு அந்த கேபிளில் கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் உண்மை என்றால் முகாபே மலேசியாவில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக வரும் வதந்திகள் உண்மை தான் என்று அந்த செய்தித்தாள் கூறியுள்ளது.
கோனோவுக்கும், முகாபேயின் மனைவி கிரேஸுக்கும் இடையே தொடர்பு இருந்தது வெளியே வரும் வரை அவர் தான் முகாபேயின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications