தொட்டில் குழந்தை திட்டக் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: அமைச்சர் செல்வி ராமஜெயம்
சென்னை: தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் தொட்டியில் போடப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஜான் ஜேக்கப் பேசியதாவது,
குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி குழந்தையின்மை பெரும் பிரச்சனையாக உள்ளது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் தொட்டியில் போடப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் கூறியதாவது,
தொட்டில் குழந்தை திட்டத்தில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்கும் வழிமுறைகளை அரசு ஏற்கனவே வகுத்துள்ளது. ஆகையால் குழந்தையில்லாத தம்பதிகள் தொட்டில் குழந்தை திட்டத்தில் உள்ள குழந்தைகளை தாராளமாக தத்தெடுக்கலாம். இந்த விஷயத்தில் அவரது பகுதியில் பிரச்சனை இருக்கின்றது என்று உறுப்பினர் தெரிவித்தால் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணைவை குழந்தைகள் வீட்டுக்கு எடுத்துச் சென்று உண்ண அனுமதி இல்லை. பெண்கள் பயமின்றி நகை அணிந்து கொண்டு வெளியே சென்று வரலாம். அம்மா ஆட்சியில் பெண்கள் பயமின்றி நடமாடும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதியோர், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒவ்வொரு வட்டாரத்திலும் அனைத்து வசதிகளுடன் கூடிய காப்பகம் அமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications