ஸ்டெர்லைட்டை மூடினால்தான் தூத்துக்குடி மக்களை காக்க முடியும் - வைகோ
சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டப்படியான அனுமதி இல்லாமலேயே 40 மாதங்கள் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கி இருக்கின்றார்கள். இந்த ஆபத்தான ஆலையை மூடினால்தான் தூத்துக்குடி மக்களைக் காக்க முடியும், என்று உச்ச நீதிமன்றத்தில் வைகோ வாதாடினார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, ஆலை நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
'சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும்' என்று ஆலை நிர்வாகத் தரப்பில் வாதாடினார்கள். இந்த வழக்கு விசாரணையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு தனது வாதங்களை எடுத்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தன்னுடைய வாதங்களை ஆதாரங்களுடன் அடுக்கினார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டப்படியான அனுமதி இல்லாமலேயே, 40 மாதங்கள் இந்த ஆலையை இயக்கி இருக்கின்றார்கள் என்றும் 2010 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து, இன்றுவரை, ஆலையை இயக்குவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடையாது என்பதை ஆதாரத்துடன் வைகோ தெரிவித்தார்.
தொடர்ந்து சட்டத்துக்கு எதிராகவே ஆலையை இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.
1995-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி, ஆலையை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தபோதும், சில நிபந்தனைகளைக் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று அறிவித்தது.
ஆனால், தூத்துக்குடி அருகில் உள்ள தேசிய கடல் பூங்காவில் இருந்து, 15 கிலோ மீட்டருக்கு உள்ளாகவே தொழிற்சாலையை அமைத்து உள்ளனர். இந்த ஒரு காரணத்துக்காகவே, இந்த ஆலையை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, என்றும் வைகோ தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய ஆலைத்தரப்பு வழக்கறிஞர், 'அந்தக் கடல் பகுதி 2000-ம் ஆண்டு வரையிலும், தேசிய கடல் பூங்காவாக அறிவிக்கப்படவில்லை' என்றார்.
மேலும் வைகோ பேசுகையில், "ஸ்டெர்லைட் ஆலையால், தூத்துக்குடி பகுதி வட்டார விவசாயிகள், மீனவர்கள், பெரும் பாதிப்புக்கு ஆளாகி விட்டனர். மீன்வளம் அழிகிறது, கடல் வளம் நாசமாகிறது, விளைநிலங்கள் நாசமாகி விட்டன.
ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் ஒவ்வொரு நாளும், போபால் விஷவாயு நாசத்தை, தூத்துக்குடி வட்டார மக்கள் அனுபவிக்க நேரும். ஆலையை நிரந்தரமாக மூடினால்தான், அப்பகுதி மக்களைக் காப்பாற்ற முடியும்," என்றார்.
இதைத் தொடர்ந்து மறு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கை ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.












Click it and Unblock the Notifications