மதுரையில் செயல்பட்ட போலி உரத் தொழிற்சாலை கண்டுபிடித்து 'சீல்'
மதுரை: திருப்பரங்குன்றம் அருகே செயல்பட்டு வந்த போலி உர தொழிற்சாலைக்கு மதுரை மாவட்ட அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் 4 வழிச்சாலையில் உரப்பொடி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வேகமாக சென்றது. அப்போது, அந்த பகுதி வழியாக வந்த திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குனர் செல்வன் தலைமையிலான அதிகாரிகள் குழு அந்த லாரியை நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, அருகில் உள்ள குடோவுனில் இருந்து தஞ்சாவூருக்கு உரப்பொடி மூட்டைகளை எடுத்து செல்வதாக கூறினர். இதில் சந்தேகமடைந்த வேளாண்மை அதிகாரிகள் அந்த உரப்பொடி குடோவுனுக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியா மூட்டைகளை வெளியில் இருந்து வாங்கி வந்து, அந்த யூரியாயுடன் அகரகர் மற்றும் கரித்தூள்களை சேர்த்து அதை குருனை தலை சத்து என்னும் போலி உரங்களை தயார் செய்து விற்பனை செய்வது தெரிந்தது.
இவ்வாறு தயாரிக்கப்படும போலி உரங்கள் ராஜா 100, லெட்சுமி 600 என்ற பெயரில் 50 கிலோ கொண்ட ஓரு மூட்டை 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது. இது குறித்து வேளாண்மை அதிகாரிகள் மதுரை கலெக்டர் சகாயத்திடம் அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து, அந்த உரதொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த மாவட்ட அதிகாரிகள் போலியாக தயாரிக்கப்பட்டு வைத்திருந்த 1000 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மத்திய உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி வசிக்கும் மாவடத்திலேயே போலி உரத் தொழிற்சாலை அமைக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications