மீண்டும் வந்தது உழவர் பாதுகாப்பு திட்டம்-விவசாயிகளுக்கு மாதம் ரூ. 1000 பென்ஷன்

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: திமுக ஆட்சியால் கிடப்பில் போடப்பட்ட உழவர் பாதுகாப்புத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஓய்வூதியம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையி்ல் இதுதொடர்பாக விதி 110-ன் கீழ் ஜெயலலிதா வாசித்த அறிக்கை:

உண்டி கொடுத்து, உயிர் கொடுக்கும் உழவுத்தொழிலே உலகத்தின் உன்னத தொழில் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.

கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி விவசாயி!
முன்னேற்ற பாதையிலே மனதை வைத்து
முழு மூச்சாய் அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்துப் பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன் விவசாயி

என்று எம்.ஜி.ஆர். பாடியபடி, நீரிலே முத்தெடுக்காமல் நிலத்திலே முத்தெடுத்து ஊருக்கு உணவூட்டும் உன்னத தொழிலாளிதான் விவசாயி. பயிர் வளர்த்து, உயிர் வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வு வளம் பெற எனது தலைமையிலான அரசு பல முன்னோடி திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கும், சிறு, குறு விவசாயிகளுக்கும், வாழ்க்கை முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, கருவறை முதல் கல்லறை வரை பயன் அளிக்கக் கூடிய "தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம்'' என்ற சமூக பாதுகாப்பு திட்டம், எனது முந்தைய ஆட்சிக்காலத்தில், 15.8.2005 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், அதன்பின்னர், 2006-ம் ஆண்டு, முந்தைய தி.மு.க. அரசு, இந்த திட்டத்திற்கு மாற்றாக, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள்-விவசாயிகள் (சமூக பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது.

இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ், ஏதாவது ஒரு இனத்தின் கீழ் உதவித்தொகையின் அளவு மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் கூட, சட்டமன்றத்தைக் கூட்டி, இந்த சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வந்தாக வேண்டும். இவ்வாறு, 2006-ம் ஆண்டு தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூக பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டம் நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்ததாக இருந்ததால், அந்த சட்டத்தை ரத்து செய்வதற்காக, 2011-ம் ஆண்டு தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) நீக்க சட்டம் இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டு, இதற்கான அரசு அறிவிக்கை 27.8.2011 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில், விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில், புதிய, விரிவுபடுத்தப்பட்ட, சமூக பாதுகாப்பு திட்டம் ஒன்றை எனது தலைமையிலான அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்த புதிய திட்டம் "முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம்'' என்று அழைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், 2.5 ஏக்கருக்கு மேற்படாத நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற்படாத புன்செய் நிலம் முதலியவற்றை உடைமையாக கொண்டு, அந்த நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும், 18 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட குறு மற்றும் சிறு விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 முதல் 65 வயது வரை உள்ள அனைத்து விவசாய குத்தகைதாரர்கள், தொழிலாளர்கள் மற்றும் இவர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் பயன்அடைவர்.

இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில், விவசாய தொழிலில் ஈடுபடும் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் பண்பேறிய சிவப்பு வண்ணத்திலும், அதாவது மரூன் வண்ணத்திலும், அவர்களை சார்ந்து வாழும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு சாம்பல் நிறத்திலும் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இவ்வாறு அடையாள அட்டை பெறுபவர்கள் அனைவரும் அரசின் திட்ட உதவிகளை பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

இதுவரை குடும்ப தலைவருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டு வந்த நிலை மாறி இந்த புதிய உழவர் பாதுகாப்பு திட்டத்தில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படுவதால், எவ்வித விடுபடுதலும் இன்றி, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் திட்ட உதவிகளைப்பெற வழிவகை ஏற்படும்.

விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கல்லூரி கல்வி உள்ளிட்ட உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில், இவர்கள் வேறு எந்த கல்வி உதவி திட்டத்தின் கீழ் உதவி பெற்றாலும், இந்த திட்டத்தின் கீழும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கு கீழ்க்கண்டவாறு உதவித்தொகைகள் வழங்கப்படும்.

தொழிற்பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.), பல்தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (பாலிடெக்னிக்) மற்றும் இதர பட்டயப் படிப்புகளுக்கு ரூ.1,250 முதல் ரூ.1,950 வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.1,750 முதல் ரூ.2,500 வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

முதுகலை பட்டப்படிப்புகளுக்கு ரூ.2,250 முதல் ரூ.3,750 வரை ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

சட்டம், பொறியியல், மருத்துவம், வேளாண்மை, கால்நடை அறிவியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கு இளங்கலையில் ரூ.2,250 முதல் ரூ.4,750 வரையிலும், முதுகலையில் ரூ.4,250 முதல் ரூ.6,750 வரையிலும் ஆண்டு ஒன்றுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

2006-ம் ஆண்டு, முந்தைய தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்தில், வேறு ஏதேனும் மத்திய அல்லது மாநில அரசு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை பெறப்பட்டால், இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற முடியாது என்ற நிலைமை தற்போது மாற்றப்பட்டு, வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை பெற்றாலும், இந்த திட்டத்திலும் கல்வி உதவித்தொகை பெற இயலும்.

சமூகநலத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திருமண உதவி திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற தகுதி உள்ளவர்கள் அந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவர். அவ்வாறு திருமண உதவி திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற இயலாதவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகையாக, ஆணுக்கு ரூ.8,000, பெண்ணுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பதிவு பெற்ற உறுப்பினருக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையால் மகப்பேறு உதவிக்கென செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் இந்த உதவித்தொகை வழங்கப்படும். மகப்பேறு உதவித் தொகையினை எளிதாக பெறும் வகையில் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) மூலம் தேவையான சான்றிதழ்களை ஒருமுகப்படுத்தி வழங்க இத்திட்டத்தின் கீழ் வசதிகள் செய்து தரப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறுவர்.

முந்தைய தி.மு.க. அரசால் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், இயற்கை மரணம் மற்றும் விபத்து போன்ற நிகழ்வுகளில் குடும்ப தலைவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. அது தற்போது மாற்றப்பட்டு, ஒரு குடும்பத்தில் கணவன் மற்றும் மனைவி இருவரும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் தனித்தனியே அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால், இந்த இருவரில் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் நிவாரணம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் உறுப்பினரோ அல்லது அவரை சார்ந்தவரோ இறக்க நேரிட்டால், அந்த குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை உடனடியாக வழங்கப்படும். ஈமச்சடங்கு நிவாரணம் பெற இறப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படுவதுடன், குடும்ப தலைவர் இறந்தால் மட்டுமே ஈமச்சடங்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற நிபந்தனையும் தற்போது மாற்றப்பட்டு உள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள "முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம்'' மாவட்ட அளவில் கலெக்டர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மூலமாக செயல்படுத்தப்படும். திட்ட செயல்பாட்டினை மேற்பார்வை இடுவதற்கு அரசு அளவில் ஒரு உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.

"முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம்'' என்ற இந்த விரிவுபடுத்தப்பட்ட புதிய திட்டம், தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆகியோருக்கு மிகுந்த பயன் அளிக்கக்கூடிய திட்டமாக இருக்கும் என்று கூறினார் முதல்வர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+