பரமக்குடி கலவரம் தொடர்பாக 1000 பேர் மீது வழக்கு- பலர் கைது- பள்ளிகளுக்கு விடுமுறை

பரமக்குடியில் நேற்று ஏற்பட்ட திடீர் வன்முறை பெரும் கலவரமாக மாறியது. இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தலித் மக்கள் மீது போலீஸார் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இதேபோல மதுரை சிந்தாமணி பகுதியிலும் வன்முறை வெடித்து அங்கும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் சிலர் காயமடைந்தனர்.
1000 பேர் மீது வழக்குப் பதிவு
இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆயிரம் பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் மதுரையில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளிகள் மூடல்
இந்த நிலையில் தொடர்ந்து அசாதாரண நிலை நிலவி வருவதால் பரமக்குடி, பார்த்திபனூர், மானாமதுரை, காளையார்கோவில், இளையாங்குடி, திருப்புவனம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர் ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
உறவினர்கள் கதறல்
இந்த நிலையில், கலவரத்தில் சிக்கி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூவரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அங்கு உறவினர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர். அனைவரும் கடும் கோபத்துடனும், விரக்தியுடனும் காணப்படுகின்றனர். பலர் கதறி அழுதபடி உடல்களைப் பெறுவதற்காக காத்துள்ளனர்.
இதற்கிடையே, நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்த பலர் இன்னும் வீடு திரும்பவில்லையாம். அவர்களுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை என்று கூறி உறவினர்கள் பல்வேறு காவல் நிலையங்களை முற்றுகையிட்டு வருகின்றனர்.
மதுரை புறநகர்களில் அசாதாரண நிலை
மதுரையைப் பொறுத்தவரை அமைதியாக காணப்படுகிறது. அதேசமயம், தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பல புறநகர்ப் பகுதிகளிலும், கிராமங்களிலும் அசாதாரண நிலை காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications