துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரி விருதுநகரில் சாலை மறியல்
விருதுநகர்: பரமக்குடி கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கோரி விருதுநகர் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்காக பரமக்குடி சென்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரம் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தென்மண்டல ஐ.ஜி ராஜேஸ்தாஸ் மற்றும் காவல்துறையினரை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
துப்பாக்கி சூட்டிற்கு பலியான 6 பேர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் கிராமக்கள் கேட்டுக்கொண்டனர். மறியல் காரணமாக விருதுநகர் – அழகாபுரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதுநகர் வருவாய் கோட்டாச்சியர் மேரி கிராம மக்களுடன் சமாதானப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் நிலைமை சீரானது.












Click it and Unblock the Notifications