பாகிஸ்தானியரைக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள் விடுதலை
துபாய்: பாகிஸ்தானியர் ஒருவரை கொலை செய்து மரணத் தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள், 4.36 கோடி ரூபாய் அபராதம் அளித்ததால், துபாய் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
ஐக்கிய அரபு நாட்டில் உள்ள சார்ஜாவில், கடந்த 2009ம் ஜனவரி மாதம் பாகிஸ்தானை சேர்ந்த மிஸ்ரி நசீர்கான் என்பவரை 17 இந்தியர்கள் சேர்ந்து கொலை செய்தனர். சட்டத்திற்கு புறம்பான முறையில் மதுபானம் விற்பது தொடர்பாக எழுந்த தகராறு நசீர்கானை, 16 பஞ்சாப் மாநிலத்தவரும், ஒருவர் ஹரியானா மாநிலத்தவர் உட்பட 17 இந்தியர்கள் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.
இந்த வழக்கில், 17 பேரும் கைது செய்யப்பட்டு, ஷார்ஜா நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது, தங்களால் கொலை செய்யப்பட்ட நசீர்கான் குடும்பத்திற்கு 4.36 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்குவதாக, குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்ப்டடது.
இதற்கு மிஸ்ரி நசீர்கானின் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று குற்றவாளிகளான 17 பேரும் நஷ்டஈடு பணமான 4.36 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தினர். இந்த பணத்தை, நசீர் கானின் உறவினர் முகமது ரம்ஸான் என்பவர் பெற்று கொண்டார்.
ஆயினும் குற்றவாளிகள் அனைவரும் 2 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் 17 குற்றவாளிகளும் ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து விட்டதால், அவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் இசைந்தது.
17 பேரையும் இந்தியாவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் முடிந்த பின், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications