விருதுநகரில் பஸ் நிலையத்தில் நின்ற பஸ்சுக்கு தீ வைப்பு
விருதுநகர்: விருதுநகர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கு, தீவைத்த மர்மக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில், நேற்று மதியம் 1.45 மணிக்கு மல்லையநாயக்கன்பட்டி கிராமத்திற்கு செல்லும் அரசு பஸ் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ்சை டிரைவர் திருசெல்வம் அங்கு நிறுத்திவிட்டு, விசாரணை அலுவலகத்திற்குள் சென்றிருந்தார்.
இந்நிலையில், பஸ்சிற்குள் இருந்து புகை வருவதாக சில பயணிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பஸ் நின்ற இடத்திற்கு டிரைவர் திருசெல்வம் சென்று பார்த்த போது, பஸ்சிற்குள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதுகுறித்து, திருசெல்வம் பஸ் நிலையத்தில் இருந்து மற்ற ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். பஸ் நிலைய ஊழியர்கள் சேர்ந்து, தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அதற்கு தீ வேகமாக பஸ்சின் இருக்கைகளுக்கு பரவி, கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.
இதையடுத்து விருதுநகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தீயை அணைத்தனர். விருதுநகர் போலீசாரும் வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இதில், 1.45 மணிக்கு சங்கரலிங்கபுரத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு பஸ் வந்துபோது, பயணித்தவர்களில் யாரோ ஒருவர் தான் தீ வைத்துள்ளதாக தெரிந்தது. இது குறித்து மேலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பஸ் நிலையத்தில் நின்ற பஸ் தீப்பிடித்த எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications