அமைதி, மத நல்லிணக்கத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம்- நரேந்திர மோடி அறிவிப்பு

குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த நாளே இந்தப் போராட்டத்தை மோடி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, பாஜகவுக்குக் கிடைத்த வெற்றி என்று அந்தக் கட்சி வர்ணித்துள்ளது. இந்த நிலையில் மத நல்லிணக்கம், அமைதிக்காக 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மோடி அறிவித்துள்ளார். மேலும் அவரை தேசிய அளவில் களம் இறக்க பாஜக தயாராகும் நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதம்:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். 2002 கலவரத்திற்குப் பின்னர் குஜராத் அரசு மீதான அபாண்டமான புகார்கள், பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு இதன் மூலம் ஒரு முடிவு வந்துள்ளது.
கடந்த 10 வருடங்களாக என்னையும், எனது அரசையும், எனது மாநிலத்தையும் அவமானப்படுத்தி பேசுவது ஒரு சிலருக்கு பேஷனாகவே இருந்து வந்தது. ஆனால், பொய்களையும், கட்டுக்கதைகளையும், அவதூறுகளையும் பரப்பி வந்தவர்கள் இன்று பாதாளத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
2002க்குப் பிறகு அமைதி, மத நல்லிணக்கம், வளர்ச்சி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது குஜராத். பொய்கள், அவதூறுகள், சதித் திட்டங்கள், குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் இதை சாதித்துள்ளது குஜராத்.
சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் மேலும் வலுவாக்கும் வகையில், சத்பவன இலக்கு என்ற இயக்கத்தை நான் தொடங்குகிறேன்.
இதன் ஒரு பகுதியாக நான் 17ம் தேதி சனிக்கிழமை முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இது 19ம் தேதி முடிவடையும். இந்த உண்ணாவிரதத்தின் மூலம் குஜராத்தில் நிலவி வரும் அமைதி, மத நல்லிணக்கும், ஒற்றுமை ஆகியவை மேலும் வலுவடையும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறியுள்ளார் மோடி.












Click it and Unblock the Notifications