பரமக்குடி வன்முறை சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் மீதுதான் தவறு-டாக்டர் ராமதாஸ்
சென்னை: பரமக்குடி வன்முறை சம்பவத்தில் காவல்துறையினர் மீதுதான் தவறு உள்ளது. எனவே தவறு செய்தவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
பரமக்குடி அருகே தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை காவல்துறையினர் அலட்சியமாக கையாண்டுள்ளனர். அப்போதே கொலையாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் தலித் சமுதாய மக்கள் கொதிப்படைந்திருக்க மாட்டார்கள்.
மேலும், ஜான் பாண்டியனை தேவையில்லாமல் அவசரம் அவசரமாக கைது செய்தது தவறு. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் எடுக்காமல் கைது செய்து விட்டு, பின்னர் வன்முறை மூண்டபோது, தற்காப்புக்காக சுட்டோம் என்று கூறுவது தவறானது.
எனவே துப்பாக்கிச் சூடு நடத்தஉத்தரவிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட தவறு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
விலங்குகளால் கொல்லப்படும் நபர்களுக்கே இழப்பீடாக 3 லட்ச ரூபாய் தரும்போது, இந்தக் கலவரத்தில் போலீஸாரால் கொல்லப்பட்ட நபர்களுக்கு வெறும் 1 லட்ச ரூபாய் இழப்பீடு என்பது மிகவும் தவறு. அவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications