ஜான் பாண்டியனைக் கைது செய்ய வேண்டியதன் அவசியம், பின்னணி என்ன?- பாஜக கேள்வி
விழுப்புரம்: ஜான் பாண்டியனைக் கைது செய்ததால்தான் வன்முறை மூண்டு 7 பேரின் உயிர் பறி போக காரணமாக அமைந்தது. அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன, அதற்கான பின்னணி என்ன என்பதை அரசு விளக்க வேண்டும் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்,
தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமையை காட்டும் நாளாக நினைத்து, இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்த நினைத்து ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக அவ்விடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். நானும் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தேன். காவல் துறை வரவேண்டாம் என்று அறிவுறுத்தியதால் அந்த இடத்திற்கு செல்லவில்லை.
இம்மானுவேல் பெயரில் அந்த மக்கள் ஒன்று திரண்டது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் ஆரம்பத்திலேயே ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? அதன் பின்னணி என்ன?
ஜான்பாண்டியன் அந்த இடத்திற்கு செல்லவேண்டாம் என்று காவல் துறை அறிவுறுத்தியும் அவர் மீறி சென்றிருக்கக்கூடாது. அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன் உண்மையை வெளிப்படுத்தும் என்பது என் எண்ணம்.
செப்டம்பர் 11 மூன்று விஷயங்களை நினைவுபடுத்த வேண்டிய நாள். பாரதியார் நினைவு நாள், இந்துமதம் என்றால் என்ன என்று சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் பறைசாற்றிய நாள், சிலர் தீவிரவாதிகளாகி தங்கள் பலத்தை அமெரிக்காவுக்கு உணர்த்திய நாள்.
தன் நாட்டுக்கு எதிராக சதி செய்தார் என்று அன்னிய நாட்டிற்குச் சென்று பின்லேடனை கொன்று, அன்றிரவே கடலில் கரைத்தது அமெரிக்கா. இதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் நம்நாட்டில் வேறுவிதமாக உள்ளது. அப்சல் குருவையும், கசாபையும் தூக்கிலிட பாஜக வலியுறுத்துகிறது, ஆனால் செய்யவில்லை.
ஒபாமா பயங்கர வாதத்தை ஒழிக்க துணை நிற்போம் என்கிறார், ஆனால் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கிறார்.
அன்னா ஹசாரே எம்.பி.க்கள் வீட்டின் முன் முற்றுகையிடுங்கள் என்கிறார். இது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும். அதற்கு பதிலாக வீட்டின் அருகே உள்ள பொது இடத்தில் போராட்டம் நடத்தலாம்.
உள்ளாட்சித் தேர்தலில் எவ்வளவு இடங்களில் போட்டியிட முடியுமோ, அத்தனை இடங்களில் போட்டியிடுவோம் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications