சென்னை, திருச்சி, கோவையில் கே.என்.நேரு-சகோதரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

கடந்த தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. இவர் மீது திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி வாங்கியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
இதன்பேரில் கே.என்.நேரு, அவரது தம்பி ராமஜெயம், சவுந்திர பாண்டியன் எம்.எல்ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, திருச்சி துணை மேயர் அன்பழகன் உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நேரு உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேரு கடலூர் சிறையிலும், ராமஜெயம் பாளையங்கோட்டை சிறையிலும், மற்றவர்கள் திருச்சி, சேலம் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நேரு 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசார் புகார் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையில் போலீசார் திருச்சி தில்லைநகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள கே.என்.நேருவின் வீட்டில் காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
வீட்டிலிருந்த நேருவின் மகன் அருண், மருமகன் ஆனந்த் மற்றும் குடும்பத்தினரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை உள்புறமாக பூட்டிக் கொண்டு சோதனை நடத்தினர்.
இதேபோல தில்லை நகர் 5வது குறுக்கு தெருவில் உள்ள கே.என். நேருவின் அலுவலகம், 10-வது குறுக்கு தெருவில் உள்ள இன்னொரு வீடு, சாஸ்திரி ரோட்டில் உள்ள நேருவின் தம்பி ராமஜெயத்தின் அலுவலகம் ஆகிய இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
திருவாணைக்காவல் பெரியார் நகரில் உள்ள நேருவின் உறவினர் கோபால் வீடு, நேருவின் சொந்த ஊரான கானக்கிளியநல்லூரில் உள்ள வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம் ஆகிய இடங்களில் உள்ள நேருவின் தம்பி ரவிச்சந்திரனின் வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள நேருவின் தம்பி மணிவண்ணனின் 2 வீடுகளிலும் சோதனை நடத்தினர்.
மொத்தம் 13 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனைகள் நடந்தன.
சமீபத்தில் சட்டமன்றத்தில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் கே.என்.நேரு அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், உறவினர்களுக்கு அரசு சொத்தை பயன்படுத்திய வகையில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையடுத்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந் நிலையில் இன்று இந்த ரெய்ட் படலம் ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications