பெட்ரோல் விலை உயர்வுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம்: விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை ஏற்றத்தால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகிறது.
டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கான விலையை மத்திய அரசு 24-6-2011 முதல் உயர்த்தியது. இதன் விளைவாக, விலைவாசி உயர்வும், அதைத்தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பும் ஏற்பட்டது.
தற்போது, பெட்ரோல் விலையை 15-ம் தேதி நள்ளிரவு முதல் 2 ரூபாய் 61 காசுகள் என்ற அளவில் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீருந்துகள் ஆகியவைகளைப் பயன்படுத்தும் சாதாரண மக்களை வெகுவாக பாதிக்கும்.
மேலும் அவர்களின் வாங்கும் சக்தியைக் குறைப்பதுடன், அவர்களுக்கு பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும். விலைவாசி ஏறி வரும் இந்த நேரத்தில், விலைவாசியைக் குறைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, பெட்ரோல் விலை உயர்வுக்குக் காரணமான மத்திய அரசின் நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும்.
15-ம் தேதி முதல் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு நான் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை உடனடியாகக் குறைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications