சேலம் மருத்துவமனையை சீரமைக்கக் கோரி போராட்டம்; 150 பேர் கைது
சேலம்: சேலத்தில் 6 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த திமுக ஆட்சியில் அவசரக் கோலத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதனால் மக்களின் முழுபயன்பாட்டிற்கு அந்த மருத்துவமனை வரவில்லை. அந்த மருத்துவமனையை முழு பயன்பட்டிற்கு கொண்டு வரக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் மகரபூஷணத்திடம் மனு அளித்தனர்.
ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இதையடுத்து இன்று காலையில் சேலம் ஜங்ஷன், கந்தம்பட்டி பைபாஸ், மூன்று ரோடு, சன்னியாசி குண்டு உட்பட 6 இடங்களில் நடைபயணம் நடத்தப் போவதாக அறிவித்தனர். ஆனால் மூன்று ரோடு பகுதியில் நடைபயணத்திற்கு பதிலாக திடீரென சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் வெளியூரில் இருந்து சேலம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் வர முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களை மறியலைக் கைவிடக் கோரியும் யாரும் கலைந்து போகவில்லை. இதைத் தொடர்ந்து 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களையும் கைது செய்யப் போவதாக பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் கூறியும் யாரும் கலையாமல் நின்றதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
10 பேரை பிடித்து வேனில் ஏற்றினர். தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. கைது செய்யும் போது தொண்டர்கள் கடித்ததில் 2 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் கோபி மற்றும் போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.
கந்தம்பட்டி பைபாஸ் சாலையில் நடந்த நடைபயணத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமடைந்தனர். இதில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஜங்ஷன் அருகே 38 பேர் உட்பட 6 இடங்களில் நடந்த ஆர்ப்பட்டத்தில் மொத்தம் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் 66 பேர் கைது:
நேற்றிரவு உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியை அடுத்த எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் கோவி.மனோகரன் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பெண்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து 66 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications