கர்நாடகாவில் இருந்து ஆந்திராவிற்கு லாரியில் கொண்டு சென்ற ரூ.4.95 கோடி பறிமுதல்
பெல்லாரி: ஆந்திர மாநிலம் குண்டக்கலில் போலீசார் நடத்திய சோதனையில் லாரியில் சிக்கிய 4.95 கோடி ரூபாய் கொண்ட பண மூட்டைகள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் இருந்து ஆந்திராவிற்கு லாரியில் பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம் குண்டக்கல் நகரில் லாரி ஒன்றை சந்தேகத்தின் பேரில், போலீசார் பரிசோதித்தனர்.
அப்போது அந்த லாரியில் 3 மூட்டைகளில் கத்தை கத்தையாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கணக்கிட்ட போது, 4.95 கோடி ரூபாய் இருந்தது. விசாரணையில் அந்த பணம் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்துக்கு கொண்டு செல்வது தெரிந்தது.
பணத்தை பறிமுதல் செய்த போலீசார் லாரியில் வந்த 2 பேரை கைது செய்தனர். இந்தப் பணம் கர்நாடக முன்னாள் அமைச்சரான ஜனார்தன ரெட்டி மற்றும் அவரது சகோதரர்களுக்குச் சொந்தமானது என்று கருதப்படுகிறது.
சமீபத்தில் சுரங்க ஊழல் விவகாரத்தில் ஜனார்தன ரெட்டி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜனார்த்தன ரெட்டி சகோதர்களிடம் சிபிஐ விசாரணை:
இந் நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் சகோதரரிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
கர்நாடக முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான ஒபுலபுரம் சுரங்க நிறுவனம் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இரும்புத் தாது எடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது மைத்துனர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி அவர்கள் இருவரையும் கைது செய்தது. ஜனார்த்தன ரெட்டியை சிபிஐ தனது காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இதையடுத்து ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர்களான சோமசேகர ரெட்டி மற்றும் கருணாகர ரெட்டி ஆகியோரை விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது. அதன்படி விசாரணைக்கு வருமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பியது.
அதன்படி சோமசேகர ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் சிபிஐ தீவிர விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.
ஜனார்த்தன ரெட்டியின் இன்னொரு சகோதரரான கருணாகர ரெட்டியும், சுரங்க நிறுவன அதிகாரிகளும் இன்று சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications