மானிய விலையில் இனி வருடத்துக்கு 4 சமையல் கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே!

இது குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான எரிபொருட்களுக்கான அமைச்சர்கள் குழு இன்று ஆலோசித்து முடிவெடுக்க உள்ளது.
இப்போது வீட்டு உபயோகத்துக்கு வழங்கப்படும் 14.5 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலை ரூ. 395 முதல் ரூ. 415 வரை உள்ளது. மாநில வரிகளுக்கு இணங்க இதன் விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. ஆனால், இந்த சிலிண்டரின் உண்மையான விலை ரூ. 666 ஆகும்.
கிட்டத்தட்ட ரூ. 250 வரை மத்திய அரசு மானியமாக அளிப்பதால் தான் இதன் விலை ரூ. 415க்குள் உள்ளது. இதனால் ஒரு சிலிண்டரை விற்றால் மத்திய அரசுக்கு ரூ. 250 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் ஒரு ஆண்டுக்கு மத்திய அரசுக்கு ரூ. 12,629 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட சிலிண்டருக்குத் தரப்படும் மானியத்தைக் குறைப்பது குறித்தும், ஒரு ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 4 முதல் 6 சிலிண்டர்களை மட்டுமே மானிய விலையில் வழங்கலாமா என்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இரு சக்கர வாகனம், கார், சொந்த வீடு உள்ளவர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு மட்டும் இந்த நிபந்தனையை அமல்படுத்துவது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து இன்று முடிவெடுக்கப்படவுள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், ஒரு சிலிண்டரை குறைந்தபட்சம் ரூ.666 கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகும்.












Click it and Unblock the Notifications