ஜெ சொத்து குவிப்பு வழக்கு-தமிழக போலீஸ் மீண்டும் விசாரிக்க கர்நாடக நீதிமன்றம் அனுமதி மறுப்பு

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா ஆஜராகாமல் இருந்து வந்தார். நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.
மேலும், அக்டோபர் 20ம் தேதி தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இந் நிலையில், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை மறுவிசாரணை செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழக லஞ்ச ஒழிப்பு துறையும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் மறைமுகமாக தொடர்பு கொண்டுள்ளனர். மறுவிசாரணையை அனுமதித்தால் ஏற்கனவே பதிவு செய்துள்ள சாட்சி ஆவணங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவும் இந்த முயற்சி செய்யப்படுகிறது. எனவே, மறு விசாரணைக்கு அனுமதிக்கக் கூடாது என்று அன்பழகன் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜெகநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பழகன் மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி, இந்த மனு மீது ஏற்கனவே ஜூலை 29ம் தேதி அளித்த இடைக்கால தடை, வழக்கு முடிவு பெறும் வரை நீட்டிக்கப்படுகிறது. தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்து குவிப்பு குற்றச்சாட்டு பற்றி எவ்வித மறுவிசாரணையும் நடத்தக் கூடாது. இந்த வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை அசாதாரணமானது என்பதால், நீதிமன்றம் இந்த முடிவை எடுக்கிறது.
ஏற்கனவே விசாரணை நடத்தி வரும் கீழ் கோர்ட், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இந்த வழக்கு விசாரணையை தனி நீதிமன்றம் தொடர்ந்து நடத்த உத்தரவிடுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications