உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் மாற்றமில்லை- தங்கபாலு
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று, தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும் அந்தப் பொறுப்பில் தொடர்ந்து நீடித்து வரும் தங்கபாலு கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கேவலமான தோல்வியைச் சந்தித்ததும் தலைவர் பதவியலிருந்து விலகுவதாக தங்கபாலு அறிவித்தார். கட்சி மேலிடத்திற்குக் கடிதமும் அனுப்பினார். ஆனால் இதுவரை அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தது திமுக. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை அது திராட்டில் விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் வேறு வழியில்லாமல் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
ஆனால் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், தேமுதிகவுடன் கூட்டணி அமைந்தால் வரவேற்பேன். கூட்டணி குறித்து கட்சி மேலிடம் 2 நாட்களில் அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்ற காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பு காணப்படுகிறது.
மேலும் கூட்டணியில் சேருமாறு எந்தக் கட்சியையும் காங்கிரஸ் வற்புறுத்தவில்லை. காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications