விஜயகாந்த்துக்கு எதிராக தலித் தேமுதிகவினர் கொந்தளிப்பு- கொடிமரங்கள் வெட்டி சாய்ப்பு
ராமநாதபுரம்: பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் கூற தேமுதிக தலைவர் விஜயகாந்த வராததால் ஆத்திரமடைந்த அக்கட்சியைச் சேர்ந்த தலித் சமுதாயத்தினர் விஜயகாந்த்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்து கட்சி கொடிமரங்களை வெட்டிச் சாய்த்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அடுத்த காரனேந்தல் கிராமத்தை சேர்ந்த தலித் சமுதாயத்தை சேர்ந்த தே.மு.தி.க. தொண்டர்கள், நிர்வாகிகள் தே.மு.தி.க. தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் இதுவரை பரமக்குடி வராததை கண்டித்து அதிருப்தியில் இருந்து வந்தனர்.
மேலும், அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த்த தேவையில்லை என்று பேசியதால் அவர்கள் மேலும் ஆத்திரமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று விஜயகாந்த் மதுரை சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை மட்டும் பார்த்தார். ஆனால் பரமக்குடி வரவில்லை.
இதனால் காரனேந்தல் பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்தனர். கிளைச் செயலாளர் முருகேசன் தலைமையில் விஜயகாந்த்தைக் கண்டித்துப் போராட்டத்தில் குதித்த அவர்கள் கட்சி உறுப்பினர் கார்டுகள், கட்சிக் கொடிகளைத் தீயிட்டுக் கொளுத்தினர். மேலும் கட்சி கொடி மரங்களையும் வெட்டிச் சாய்த்தனர்.
இதேபோல காவனூர், வன்னிவயல் ஆகிய பகுதிகளிலும் தேமுதிகவினர் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications