டெக்சாஸ் பிளானோ ஸ்ரீ கணேஷா கோவிலில் விநாயகர் சதுர்த்தி மகோத்சவம்
பிளானோ: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிளானோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி முதல் கடந்த 4-ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி மகோத்சவம் நடந்தது.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மாநிலமான டெக்சாஸில் உள்ள பிளானோவில் ஸ்ரீ கணேஷா கோவில் உள்ளது. அங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி முதல் கடந்த 4ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி மகோத்சவம் நடந்தது. இந்த மகோத்சவத்தின்போது தினமும் விநாயகருக்கு விதவிதமான அலங்காரங்கள், கணபதி ஹோமம், கணபதி பஞ்சரத்னம், சஹஸ்ரனாம அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடந்தது.
இந்த 10 நாட்களும் சிறப்பு பஜனை நடந்தது. அதில் கணபதி புகழ் பாடல்கள் பாடப்பட்டன. விநாயகர் சதுர்த்தி அன்று காலை 7 மணி முதல் இரவு 8. 30 மணி வரை கோவில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
அன்று காலையில் கணபதி ஹோமம், 1008 மோதக ஹோமம், 108 கலச ஸ்தாபனம், சஹரஸ்ரனாம அர்ச்சனை செய்யப்பட்ட பிறகு மகா மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டது. மாலையில் விநாயகருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டது. மகோத்சவத்தின் 10-வது நாளன்று ரத யாத்திரை மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. இதில் பிளானோ மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்நதவர்கள், டாலஸில் வசிப்பவர்கள் என பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர்.
கோவில் பூசாரிகள் கண்ணன், கோபால் பட் ஆகியோர் மகோத்சவம் நடந்த 10 நாட்களும் விநாயகருக்கு சிறப்பான முறையில் அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications