போராட்டம் தொடரும்-ஜெயலலிதா கோரிக்கை நிராகரிப்பு: கூடங்குளம் போராட்டக் குழு
நெல்லை: போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழு நிராகரித்துள்ளது. தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றால் மட்டுமே போராட்டத்தை நிறுத்த முடியும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்று கோரி தீவிரப் போராட்டம் நடந்துள்ளது. நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக நடந்து வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள், மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும், போராட்டக் குழுவினர் தங்களது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கோரியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கும் அவர் இன்று கடிதம் அனுப்பினார். இதனால் போராட்டம் வாபஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்ப கூடங்குளம் போராட்டக் குழுவினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் போராட்டத்தை வழி நடத்தும் நெல்லை மற்றும் குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆயர்களும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், போராட்டத்தை தொடருவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆயர் கூறுகையில், முதல்வரின் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். அதேசமயம், மத்திய அரசு இதுதொடர்பாக உறுதி அளிக்க வேண்டும். அப்போதுதான் எங்களால் போராட்டத்தை நிறுத்துவது குறித்து சிந்திக்க முடியும்.
முதல்வர் ஜெயலலிதாவை இதுதொடர்பாக புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம். இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை மாவட்ட ஆயர்களும், போராட்டக் குழுவினரும் கலந்து கொள்வர் என்றார்.












Click it and Unblock the Notifications