உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு: அதிமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேச்சுவார்த்தை- இன்றும் தொடரும்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து அதிமுகவினருடன் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தி வரும் பேச்சுவார்த்தை இன்றும் தொடர்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிமுக குழுவோடு கடந்த வெள்ளிக்கிழமை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் வைத்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று மாலை 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
அதில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல் எம்.எல்.ஏ., கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நூர்முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று மாலை 6. 30 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை இரவு 8. 10 மணி வரை நடந்தது. பின்னர் வெளியே வந்த எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை குறித்து நிருபர்களிடம் கூறியதாவது,
உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்து அதிமுக குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தினோம். இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை தான். பேசசுவார்த்தை சுமூகமாக நடந்தது. இன்னும் தொடரவிருக்கும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எடுக்கப்படும். நல்லது நடக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
இதற்கிடையே ஏ.எம்.கோபு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஜி.பழனிச்சாமி, சிவபுண்ணியம் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் குழு நேற்றிரவு 8 மணிக்கு போயஸ் கார்டனுக்கு பேச்சுவார்த்தை நடத்த வந்தது. அந்த குழு இரவு 8. 50 மணிக்கு வெளியே வந்தது.
அப்போது ஏ.எம்.கோபு கூறியதாவது,
ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நல்லபடியாகத் துவங்கி சுமூகமாக நடந்தது. நாளை(இன்று) மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இறுதியில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நம்புகிறோம். அதிமுக வேட்பாளர் பட்டியில் வெளியிட்டுள்ளது ஒன்றும் புதிதன்று. அதனால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றார்.
இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன், துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., துணை பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் தங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட விரும்பும் உள்ளாட்சித் தேர்தல் இடங்கள் குறித்த மனுவை அதிமுக குழுவிடம் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications