தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம்
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவில் இடியுடன் கூடிய மழையும், பகலில் கடும் வெயிலும் அடித்து மக்களை சிரமத்திற்குள்ளாக்கி வருகிறது. இன்றும் மாலைக்கு மேல் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக் காலத்தின் காரணமாக ஆந்திரா, ஓரிசா, தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
கேரளா, கர்நாடகா மாநிலத்தில் தென் மேற்குப் பருவ மழைக்காலம் முடிவுறாமல் தொடர்கிறது. இதனால் 2 மாநிலங்களிலும் ஆங்காங்கே கடும் மழை பெய்து வருகிறது.
தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மாலையில் மேகம் சூழ்ந்து மழை துவங்கி, இரவு கடுமையாகிறது. சில நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்கிறது. ஆனால் காலை 35 டிகிரியும் தாண்டி வெயில் அடிக்கிறது.
இதனால் சென்னை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கல்வி மற்றும் தொழில்களுக்கு செல்வோர் அதிகளவில் குடைகளுடன் செல்வதை காண முடிகிறது.
பகலில் ஏற்படும் கடும் வெயிலால் ஏற்படும் வெப்பசலனமே, இரவில் மழை பெய்யக் காரணம். கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் பாதிப்பு, தமிழகத்தின் எல்லை மாவட்டங்களிலும் காண முடிகிறது. ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, நேற்று சென்னை மற்றும் சுற்றுபுறத்தில் சராசரியாக 40 மி.மீ மழை பதிவானது. திருத்தணி, கீரனூர், திரமயம் ஆகிய பகுதிகளில் 30 மி.மீ மழையும், ஒரத்தநாடு, காரைக்குடி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் 10 மி.மீ மழையும் பதிவானது.
மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதால், கடலில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசான மழை முதல் இடியுடன் கூடிய மழைப் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், சில இடங்களில் மழையும் பெய்ய கூடும், என்றனர்.












Click it and Unblock the Notifications