தற்கொலைப் படைத் தாக்குதலில் ஆப்கன் முன்னாள் அதிபர் ரப்பானி படுகொலை

தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் ரப்பானி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு அதிபர் ஹமீத் கர்ஸாய், உயர் மட்ட அமைதிக் குழு ஒன்றை ஏற்படுத்தி அதற்குத் தலைவராக ரப்பானியை நியமித்திருந்தார். இந்தக் குழு தலிபான்களுடன் பேச்சு நடத்தி வந்தது.
இந்த நிலையில் காபூலில் உள்ள ரப்பானியின் வீட்டுக்கு அந்தத் தீவிரவாதியும் இன்னொருவரும் வந்திருந்தனர். தலிபான்களிடமிருந்து சிறப்புச் செய்தியுடன் வந்திருப்பதாக அவர்கள் கூறியதைத் தொடர்ந்து ரப்பானியைச் சந்திக்க அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது வெடிகுண்டுடன் வந்திருந்த தீவிரவாதி ரப்பானியை கட்டித் தழுவி வணக்கம் தெரிவித்து பின்னர் தனது தலைப்பாகைக்குள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் உடல் சிதறி ரப்பானி பலியானார்.
கடந்த 2001ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குள் அமெரிக்கா தலைமையிலான படையினர் ஊடுறுவிய பின்னர் தலிபான்களால் படுகொலை செய்யப்பட்ட முதல் மிகப்பெரிய தலைவர் ரப்பானி என்பது குறிப்பிடத்தக்கது.
தலிபான்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே சமரசம் ஏற்படுவதை விரும்பாதவர்களே ரப்பானி படுகொலைக்குக் காரணம் என்று கருதப்படுகிறது. ரப்பானியின் படுகொலையால் அமைதிப் பேச்சுவார்த்தைகள் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இருப்பினும் அமைதி முயற்சிகளில் பாதிப்பு ஏற்படாது என்று ஆப்கன் அதிபர் கர்ஸாய் கூறியுள்ளார். ரப்பானி படுகொலை குறித்து அவர் கூறுகையில், ரப்பானி ஆப்கானிஸ்தானுக்காக தனது உயிரைத் தியாகம் செய்துள்ளார். தியாகியாக மாறியுள்ளார். இதன் மூலம் அமைதிக்காக பாடுபடும் எங்களைத் தடுத்து நிறுத்தி விட முடியாது என்றார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா ரப்பானி படுகொலையைக் கண்டித்துள்ளார். இது அறிவற்ற வன்முறைச் செயல் என்று அவர் வர்ணித்துள்ளார்.
எப்படி நடந்தது படுகொலை?
படுகொலைச் சம்பவம் குறித்து காபூல் காவல்துறையின் குற்றப் பிரிவு தலைவர் முகம்மது ஜஹர் கூறுகையில், ரப்பானியின் உதவியாளர் முகம்மது மசூம் ஸ்டானிக்ஸாய் என்பவருடன் அந்தத் தீவிரவாதி வந்தான். அவனது தலைப்பாகைக்குள் வெடிகுண்டை மறைத்து வைத்திருந்தான். ரப்பானியை நெருங்கி அவரைக் கட்டித் தழுவி வணக்கம் கூறியபோது தனது தலைப்பாகைக்குள் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான்.
இதில் ரப்பானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். தலிபான் தீவிரவாதியும் இதில் உயிரிழந்தான். அவனை அழைத்து வந்த ஸ்டானிக்ஸாய் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் குண்டுவெடிப்பில் காயமடைந்துள்ளார். இவரது நிலைமை தற்போது பரவாயில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும்.
முன்னதாக துபாயில் இருந்த ரப்பானியை, தலிபான் தரப்பில் தொடர்பு கொள்வதாக கூறி சிலர் தொலைபேசியில் பேசியுள்ளனர். உடனடியாக காபூல் திரும்புமாறும், இரண்டு முக்கிய தலிபான் தலைவர்கள் உங்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர். இதனால்தான் துபாயிலிருந்து கிளம்பி வந்தார் ரப்பானி என்றார் அவர்.
71 வயதான ரப்பானி, 1992ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகள், நாட்டைக் கைப்பற்றும் வரை அதிபர் பதவியில் இருந்தவர். தலிபான்கள் நாட்டைப் பிடித்ததும் ரப்பானி துரத்தியடிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications