நில அபகரிப்பு: திமுக கவுன்சிலர் தலைமறைவு, மனைவி கைது
சென்னை: நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடைய திமுக கவுன்சிலர் திருமலை தலைமறைவாகியுள்ளார். அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருமலை (52). திமுக ஒன்றிய கவுன்சிலர். கட்சியின் ஒன்றியப் பொருளாளராகவும் உள்ளார். ஆலப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார். அவரது மனைவி இந்துமதி(37).
திருமலை ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இருகின்றப்பள்ளி கிராமத்தில் கதிர்வேலு என்பவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து அங்கு மதில் சுவரும் கட்டினார். சென்னையைச் சேர்ந்த 4 பேர் அபகரித்த இடத்திற்கு போலி பத்திரம் தயாரித்துக் கொடுத்துள்ளனர். அதை பத்திரப்பதிவு அலுவலகத்திலும் பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
நிலத்தை பறிகொடுத்த கதிர்வேலுவின் மகன் தமிழ்மணி இது குறித்து காஞ்சீபுரம் எஸ்பியிடம் புகார் கொடுத்தார். அந்த புகார் மாவட்ட நில அபகரி்ப்பு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. தமிழ்மணியின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலி பத்திரம் தயாரித்துக் கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் வருவதற்குள் திருமலை தலைமறைவாகிவிட்டார். அவரது மனைவி இந்துமதி கைது செய்யப்பட்டார். போலீசார் திருமலையை வலை வீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications