முஸ்லீம் தலைவர் வழங்கிய தொப்பியை போட மறுத்த மோடியைப் பாராட்டுகிறோம்- சிவசேனா
புனே: முஸ்லீம் மதத் தலைவர் வழங்கிய தொப்பியை வாங்க மறுத்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தைரியத்தை நாங்கள் பாராட்டுகிறோம் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த கட்சியின் அதிகார்ப்பூர்வ நாளிதழான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
மோடி அமர்ந்திருந்த மேடையில் ஏறிய ஒரு இமாம், அவரிடம் ஒரு தொப்பியைக் கொடுத்தார். ஆனால் அதை மோடி வாங்கி அணிய மறுத்து விட்டார். கேமராக்களுக்கு முன்பு தொப்பியைப் போட்டு அதைப் பெரிதாக்கி விட கிடைத்த வாய்ப்பை அவர் மறுத்தது அவரது தைரியத்தைக் காட்டுகிறது.
முஸ்லீம்களைக் கவருவதற்காக இதுபோல நடந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. காங்கிரஸ் கட்சியினர்தான், இப்தார் விருந்துகளின்போது மட்டும் முஸ்லீம்கள் அணியும் தொப்பிகளைப் போட்டு நாடகமாடி அவர்களை ஏமாற்றி வருகிறார்கள்.
அகமதாபாத்தில் கடைப்பிடித்ததைப் போல உறுதியாக மோடி தொடர்ந்து செயல்பட்டால் டெல்லியை நோக்கித் திரும்பியுள்ள அவருடைய குதிரை (பிரதமர் பதவிக்கான அவரது இலக்கு) சீக்கிரமே டெல்லியில் ஓடத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ளது சாம்னா.
இன்று பாராட்டு அன்று வசவு!
இஸ்லாமியர்கள் அணியும் தொப்பியை வாங்க மறுத்ததற்காக இன்று மோடியைப் பாராட்டும் இதே சிவசேனா கட்சிதான் மோடி உண்ணாவிரதத்தைத் தொடங்குதவதற்கு முன்பு அவரை கடுமையாக சாடியிருந்தது.
இதுகுறித்து அப்போது சாம்னா கூறுகையில், இந்துக்களின் வாக்குகளை வாங்கித்தான் ஜெயித்தார் மோடி. அதை அவர் மறந்து விடக் கூடாது. இப்போது மதச்சார்பற்றவர் போல அவர் காட்டிக் கொள்ள முயல்வது கண்டனத்துக்குரியது. டெல்லியில் பதவியைப் பிடிப்பதற்காக நடக்கும் போட்டியில், மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்துக்களுக்கு அவர் விஷம் கொடுக்கப் பார்க்கிறார்.
மகாராஷ்டிராவும், குஜராத்தும் இந்துத்துவாவின் ஆய்வகம். இன்று அவர் எதைச் செய்தாலும், அதைச் செய்யும் அதிகாரம் அவருக்குக் கிடைத்தது இந்துக்களின் வாக்கு வங்கி மூலம் மட்டுமே என்பதை அவர் ஒருபோதும் மறந்து விடக் கூடாது என்று கூறியிருந்தது சாம்னா.












Click it and Unblock the Notifications