கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தியை தொடங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
மதுரை: மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என உறுதி செய்யும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியைத் தொடங்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பகுதி அக்டோபரிலும், இரண்டாம் பகுதி 2012 ஜனவரியிலும் மின் உற்பத்தியைத் துவக்குவதற்குரிய பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொன்றும் 1,000 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்டவை.
இதில் பயன்படுத்தப்படும் ரஷ்ய அணு உலை, 1985 முதல் ஐரோப்பாவின் பல பகுதிகளில் கணிசமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், வேறெங்குமே பயன்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படாத ஜைதார் உலை போன்று அல்ல என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இந்த வகை உலை, இந்தியாவில் நிறுவப்படுவது இது தான் முதல் முறை. மேலும், ஜப்பானில் சமீபத்தில் சுனாமி காரணமாக ஏற்பட்ட ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின், உலக அளவில் அணு மின் நிலையங்கள் குறித்த பயமும், பதட்டமும் ஏற்பட்டுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்தப் பின்னணியில் தான், கூடங்குளத்தில் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் அணுமின் உலைக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. பல நாடுகளும், இருக்கிற அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மறு சோதனைக்கு உட்படுத்தி வருகின்றன.
இந்தியாவும், பிரான்சிடமிருந்து புதிதாக வாங்க உள்ள அணு உலைக்கு இத்தகைய மறுசோதனை மற்றும் தகுதி சான்றிதழை வலியுறுத்தி உள்ளது. ஆனால், கூடம்குளத்தைப் பொறுத்தவரை, ஃபுகுஷிமா சம்பவத்துக்குப் பிறகு, ஒரு மேலோட்டமான சோதனையே நடத்தப்பட்டு உள்ளது. இது திருப்தியளிப்பதாக இல்லை.
எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, நம்பகத்தன்மை கொண்ட நிபுணர் குழு பரிசோதித்து சான்றிதழ் வழங்க வேண்டும். அணுசக்தி துறை மற்றும் தேசிய அணுமின் கழகத்திற்கு அப்பாற்பட்ட சுயேச்சையான நிபுணர் குழு வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டு சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தேவைப்படும் ஆய்வு பயிற்சி போன்றவை அணு சக்தி துறையாலும் தேசிய அணு மின் கழகத்தாலும் முழுமையாக உருவாக்கப்பட வேண்டும். அத்துடன், கூடங்குளம் அணுமின் நிலையத்தை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அணுசக்தி விபத்து பொறுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
இந்த அணுமின் நிலையத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கிற மக்களின் கவலை குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவற்றைத் திருப்திகரமாக செய்து முடிக்கும் வரை, கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தி துவங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications