ஜாமீனில் வந்த வீரபாண்டி ஆறுமுகத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு: சென்னையில் சிகிச்சை

சேலத்தைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் பிரேம்நாத் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. சென்னையில் தங்கி இருந்து தினமும் பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று வீரபாண்டி ஆறுமுகம் விடுதலை செய்யப்பட்டார்.
சேலம் அருகே உள்ள பூலாவரியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு கூடியிருந்த கட்சிக்காரர்களிடம் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்தும், எத்தனை பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறி்ததும் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் காரில் ஏறி சென்னைக்கு கிளம்பினார். அவருடன் அவரது மகன்கள் முன்னாள் எம்.எல்.ஏ.வீரபாண்டி ராஜா, பிரபு, சேலம் மாவட்ட துணை செயலாளர் எஸ். ஆர். சிவலிங்கம், தாரைமணியன், ஏ.ஏ. ஆறுமுகம் மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.
இதற்கிடையே வீரபாண்டி ஆறுமுகத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதற்காக சிகிச்சை பெறத் தான் அவர் சென்னை சென்றுள்ளார். எனவே, தினமும் காலை பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திட முடியாது. அதனால் நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நிபந்தனை ஜாமீனை தளர்த்தி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications