நிலநடுக்கம் பாதித்த சிக்கிமில் வெள்ளப்பெருக்கால் மேலும் அவதி: 116 பேர் பலி- 9 கிராமங்கள் துண்டிப்பு
டெல்லி: சிக்கிம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
சிக்கிம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியை மையமாக கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் சிக்கிம், நேபாளம் மற்றும் மேற்கு வங்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 116-க உயர்ந்துள்ளது.
பூகம்பத்தால் பலியானோர் உடல்களை மீட்கும் பணியே இன்னும் முடியாத நிலையில் இன்று சிக்கிமில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சீனா எல்லையையொட்டி உள்ள லாசுங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஒரு வீடு இந்திய-திபெத் எல்லை காவல் படை முகாமில் உள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளப்பெருக்கால் பூகம்ப நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சபு பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையை ஆராய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சிக்கிம் சென்றார்.
எஸ்டிஎன்எம் மருத்துவமனைக்கு சென்ற சிதம்பரம் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் சிக்கிம் மாநில ஆளுநரை சந்தித்து பேசினார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிதம்பரம் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது,
சிக்கிமில் இயல்பு நிலை திரும்ப அரசு தன்னால் முடிந்ததை எல்லாம் செய்யும். இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாருக்காக வருத்தப்படுகிறோம். மத்திய அரசு சிக்கிம் அரசுக்கு ரூ. 50 கோடி நிதி அனுப்பியுள்ளது. விரைவில் பிரதமர் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவார் என்றார்.
நிலநடுக்கத்திற்கு சிக்கிமில் மட்டும் இதுவரை 74 பேர் பலியாகியுள்ளனர். வடக்கு சிக்கிமில் உள்ள சுங்தாங் தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாங்கன் பகுதியில் மின்சாரம் மறுபடியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. அதனால் 9 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications