திருச்சி இடைத்தேர்தலில் திமுகவை காங். ஆதரிக்குமா?-தெரியாது என்கிறார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுகவை காங்கிரஸ் ஆதரிக்குமா என்பது எனக்குத் தெரியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: முதல்வர் ஜெயலலிதா, கூடங்குளம் போராட்டக் குழுவினரின் கோரிக்கைபடி, அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வர ஒப்புக் கொண்டதையடுத்து, அங்கே உண்ணாவிரதம் இருந்தவர்கள் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார்களே..

பதில்: இது ஒரு நல்ல செய்தி. அங்கே உள்ள மக்கள் எண்ணியவாறு, எல்லா வகையிலும் ஆக்கப்பூர்வமான நன்மைகள் ஏற்பட துணை நிற்க அந்த மக்கள் முன்வரும்போது அவர்கள் ஏமாற்றம் அடையாமல் இப்போது அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகளைக் காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

கேள்வி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை காங்கிரஸ் ஆதரிக்குமா?

பதில்: எனக்கு தெரியாது.

கேள்வி: உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதே?

பதில்: காலையில் ஒரு தொகுதியை பொதுத் தொகுதி என்கிறார்கள். ஆனால் மாலையில் அதையே பெண்கள் தொகுதி என்கிறார்கள். அதைப்போலவே காலையில் தனித் தொகுதி என்கிறார்கள். மாலையில் அதே தொகுதியை பொதுத் தொகுதி என்கிறார்கள்.

கேள்வி: இப்படித் தொகுதிகள் மாற்றுவதில் உள்நோக்கம் ஏதாவது உள்ளதா?

பதில்: இதுபோல் மாற்றுவதைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் முன்கூட்டியே அதைச் செய்திருக்கலாம். கடைசி நேரத்தில் இப்படியெல்லாம் தொகுதிகளை மாற்றுவது சரியில்லை.

கேள்வி: மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடரப்படுமா?

பதில்: பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

கேள்வி: உள்ளாட்சித் தேர்தல் திமுக வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளிவரும்?

பதில்: அதைப் பற்றி விவாதித்துக்கொண்டிருக்கிறோம். முடிவு பெற்றவுடன் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

கேள்வி: தேர்தல் தேதி அக்டோபர் 19 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 20ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராவதாக சொல்லி இருக்கிறார்களே?. இரண்டுக்கும் ஏதாவது தொடர்பு இருப்பதாக கருதுகிறீர்களா?

பதில்: எனக்கு தெரியாது. நான் அதைப்பற்றி சொல்வதற்கில்லை.

கேள்வி: மோடி உண்ணாவிரதம் இருந்ததைப் போல, அத்வானியும் ஊழலுக்கு எதிராக யாத்திரை மேற்கொள்ளப் போகிறாரே?

பதில்: இந்தியாவில் யார் வேண்டுமானாலும் உண்ணாவிரதம் இருக்கலாம். லட்சக்கணக்கான ஏழை மக்கள் இப்போது தொடர்ந்து இருக்கிற உண்ணாவிரதத்தை நீக்குவதற்கு, இந்த உண்ணாவிரதங்கள் பயன்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்

சூழ்ச்சி செய்து வெற்றி பெற அதிமுக திட்டம்:

இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான தொகுதிகள், தனித் தொகுதிகள், பொதுத் தொகுதிகள் ஆகிய விவரங்கள் மாவட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால், அந்த விவரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

இந்த விவரங்கள் ஆளும்கட்சிக்கு மட்டும் தரப்பட்டு, அந்தக் கட்சியின் சார்பில் அதற்கேற்ப வேட்பாளர்களின் பெயர்கள், தோழமைக் கட்சிகளுடன் கூட கலந்து பேசாமல் அறிவிக்கப்பட்டுவிட்டன.

மக்களுக்கு இந்த விவரங்கள் தெரியாததால், அந்தந்தத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொகுதி, பொதுத் தொகுதியா, பெண்கள் தொகுதியா, தனித் தொகுதியா என்று தெரியாத நிலையில் போட்டியிடுவதற்கே குழம்பி நிற்கக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொகுதி யாருக்கான தொகுதி என்று புரியாத நிலையில் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களின் மனுக்களை வாங்குவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு அந்தந்தத் தொகுதி பொதுத் தொகுதியாக ஏற்கெனவே இருந்தது என்ற நிலையில் அங்கே போட்டியிட விரும்புவோர் யார் யார் என்று கேட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுவிட்டன.

ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்பு அந்தந்தத் தொகுதியைத் தனித் தொகுதி என்றோ, பெண்கள் தொகுதி என்றோ மாறியுள்ளது. அதனால், புதிய வேட்பாளர்கள் மனுக்களைப் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பொதுவாக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மக்களையும், அரசியல் கட்சிகளையும் ஏமாற்றிவிட்டுத் தேர்தலை நடத்த அரசு முற்பட்டுள்ளது.

எவ்வாறு தோழமைக் கட்சிகளைக் கலந்து கொள்ளாமலேயே தன்னிச்சையாக வேட்பாளர்களை ஆளும்கட்சி அறிவித்திருக்கிறதோ, அதைப்போலவே, ஒட்டுமொத்தத் தேர்தலிலும் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதுகிறது. அதன் அடையாளமாகத்தான், எந்தெந்தப் பிரிவுகளுக்கு எந்தெந்தத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பதை வெளிப்படையாக அறிவிக்காமல் மூடி மறைத்து வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார் கருணாநிதி.

சென்னையில் ஆங்காங்கு போக்குவரத்து நெரிசல் ஏன்?:

அவர் வெளியிட்டுள்ள இன்னொரு கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: சென்னையில் ஆங்காங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மணிக்கணக்கில் வாகனங்கள் எல்லாம் நிற்கின்ற புகைப்படங்கள் ஏடுகளில் வெளிவந்திருக்கின்றனவே?

பதில்: போக்குவரத்து நெரிசல் செய்தியோடு வேறொரு செய்தியும் வந்துள்ளது. முதல்வரிடமும், உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டுமென்பதற்காக; போக்குவரத்து போலீசார் ஆங்காங்கு வண்டிகளை நிறுத்தி வைத்து சோதனை என்ற பெயரில் குறைந்தபட்சம் அன்றாடம் ஒவ்வொரு வரும் 50 வழக்குகளையாவது போட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவதாகவும்; அதனால் தான் போக்குவரத்தைச் சரியாக பராமரிக்காமல் ஆங்காங்கு நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மணிக்கணக்கிலே நிற்க வேண்டியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கேள்வி: ஆசிரியர்களின் இடமாறுதலுக்கான கவுன்சிலிங்கில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றனவே?

பதில்: இதைப்பற்றி தலைமை ஆசிரியர்கள் எல்லாம் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த கவுன்சிலிங் பற்றி தலைமையாசிரியர்கள் கூறும்போது, முக்கிய காலி இடங்கள் மறைக்கப்பட்டன, குறிப்பாக சென்னையில் 5 இடங்கள் காலியாக உள்ளன, ஆனால் ஒரே ஒரு இடம் மட்டுமே காலியாக இருப்பதாகக் காட்டியுள்ளார்களாம். திருவள்ளூர் மாவட்டத்தில் 12 இடங்கள் காலியாக இருந்தும் 8 இடங்களைத்தான் காட்டியுள்ளார்களாம்.

கேள்வி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதாமே?

பதில்:
இதே போல் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது பொய் வழக்கு ஒன்றினை பதிவு செய்து கைது செய்தார்கள். அந்த வழக்கிலே நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்று விடுதலை ஆகின்ற நேரத்தில் கடந்த ஜுன் மாதம் 5ம் தேதி திருவாரூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் என்னுடன் பங்கேற்று அவர் பேசினார். அப்போது முதல்வரை தாக்கிப் பேசியதாக செப்டம்பர் 15ம் தேதியன்று அவதூறு வழக்கு என்று பதிவு செய்து சிறை வாசலிலேயே கைது செய்திருக்கிறார்கள். அது வெறும் அவதூறு வழக்குதான். அதிலே கூட அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் முதலமைச்சரைத் தாக்கி பொதுக்கூட்டத்தில் பேசினார் என்று வழக்கு. ஆனால் சட்டப் பேரவையிலேயே முதல்வரும், அமைச்சர்களும் கூறிய அவதூறான அர்ச்சனைகளுக்கெல்லாம் மக்கள்தான் தக்க தீர்ப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+