உள்ளாட்சித் தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டி- முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஒத்த கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவோம் என மதிமுக முதலில் அறிவித்திருந்தது. ஆனால் மதிமுகவை கூட்டணி சேர்க்க பாமக முன்வரவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் கூட அது தனது கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முன்வரவில்லை.
இதையடுத்து மதிமுக தனித்துப் போட்டியிடும் என அதிரடியாக அறிவித்துள்ளார் வைகோ. மேலும் முதல் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி சென்னை மாநகர மேயர் பதவிக்கு நா. மனோகரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பாஸ்கர சேதுபதியும், கோவையில் அர்ஜூன ராஜும் போட்டியிடுகின்றனர்.
தூத்துக்குடி மேயர் பதவிக்கு பாத்திமா பாபு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவிக்கு பூங்கொடி சாமிநாதனும், திருப்பூர் மேயர் பதவிக்கு நாகராஜும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நகராட்சி வேட்பாளர்களையும் அறிவித்தார்
மேயர் வேட்பாளர்களைப் போல நகராட்சித் தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்களையும் வைகோ அறிவித்தார். அதன்படி அக்கட்சியின் பிரமுகர் சதன் திருமலைக்குமார் புளியங்குடி நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.
திருச்சியில் போட்டியில்லை
வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக விரோதமாக அணுகியுள்ளது.
எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண்களுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் சற்றேனும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடுகிறதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்தார் வைகோ.












Click it and Unblock the Notifications