தலைமறைவான மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு 2வது வழக்கிலும் முன்ஜாமீன்
சென்னை: 2 வழக்குகள் தொடரப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவாகி விட்ட முன்னாள் திமுக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு 2வது வழக்கிலும் முன்ஜாமீன் கிடைத்துள்ளது. வழக்கு விசாரணைக்குத் தேவைப்படும்போது நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதி்மன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர், முருங்கப்பாளையம், தெற்கு திரு.வி.க., நகரைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ். இவரது நிலத்தை வாங்கிய விவகாரத்தில் பொங்கலூர் பழனிச்சாமி, அவரது மகன் பைந்தமிழ் பாரி, முன்னாள் எம்.எல்.ஏ. மணி, அவரது மகன் வெங்கடேஸ்வரன், பாலன், பூபதி உள்ளிட்டோர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், செல்லாத காசோலைகளைக் கொடுத்ததாகவும் கூறி 7 பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்தனர் அவினாசி பாளையம் போலீஸார்.
இதையடுத்து பைந்தமிழ் பாரி, மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் தலைமறைவாகி விட்டனர். பொங்கலூர் பழனிச்சாமி பெங்களூருக்கு ஓடி விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 30ம் தேதி முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. அவர் பல்லடம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி முன்ஜாமீனைப் பெறலாம் என அது உத்தரவிட்டது.
ஆனால் அவர் வரவில்லை. அவர் மீது மேலும் ஒரு நில மோசடி வழக்கு பதிவாகியுள்ளதால் அதில் கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சத்தால் அவர் வரவில்லை. மாறாக அந்த வழக்கிலும் முன்ஜாமீன் கோரி மனுசெய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுதந்திரம், முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். விசாரணைக்குத் தேவைப்படும்போது போலீஸார் முன்பு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications